வசதிகளும் வாய்ப்புகளும் எமது இளைஞர்களுக்கு கிடைக்கின்றபோது அவர்களால் பல சாதனைகளை நிலைநாட்டமுடியும் – ஊர்காவற்றுறை இளைஞர் விளையாட்டு விழாவில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, May 14th, 2019

விளையாட்டு துறையில் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் வசதிகளும் வாய்ப்புகளும் எமது இளைஞர்களுக்கு கிடைக்கின்றபோது அவர்களால் பல சாதனைகளை நிலைநாட்டமுடியும். அத்தகைய ஒர் அடைவுமட்டத்தை எமது இளைஞர் யுவதிகளும் அடையவேண்டும் என்ற நோக்கத்துடனேயே நாம் பலவழிகளிலும் அயராது உழைத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் –

தற்போதைய சூழ்நிலைபோல் கடந்தகாலங்களிலும் பல நெருக்கடியான காலகட்டங்களை எமது மக்கள் கடந்துவந்திருக்கின்றனர். இன்றை நிலைமை எவ்வாறு ஒர் அர்த்தமற்ற வகையில் இருக்கின்றதோ அதுபோலத்தான் அன்றைய நிலைமையும் இருந்தது.

ஆனாலும் கடந்த கால சூழ்நிலைகள் மாற்றம் பெற்று மக்கள் ஓரளவேனும் சந்தோசமான வாழ்வியலை வாழக்கூடிய நிலைமை உருவாக்கப்பட்டிருந்தது. அதை பாதுகாப்பதும் அதை முன்னோக்கி வளர்ப்பதும் மிகவும் அவசியம். அந்தவகையில் அனைத்து இளைஞர் யுவதிகளும் இலங்கையர்கள் என்ற எண்ணக்கருவோடு முன்வந்து செயற்படுகின்றபோது இன்னும் பல சாதனைகளை எமது இளைஞர்கள் சாதிக்க முடியும். அதேபோல எமது மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் சரியான ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கும் அதை வளர்த்தெடுப்பதற்கும் இளைஞர்களாகிய நீங்கள் முன்வரவேண்டும். அதற்கான ஒத்துழைப்புகளையும் முயற்சிகளையும் பெற்றுத்தர நாம் என்றும் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.

இந்த விளையாட்டு நிகழ்வில் விஷேட நிகழ்வாக நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் ஊர்காவற்றுறை ஞானஒளி விளையாட்டுக் கழகமும் மெரிஞ்சிமுனை இருதயராசா விளையாட்டுக்கழகமும் பலப்பரீட்சை நடத்தியிருந்த நிலையில் மேலதிக உதை மூலம் ஞானஒளி விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.

குறித்த விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகள் மற்றும் கழகங்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெற்றிக் கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஊர்காவற்றுறை பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி சதீசன், ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச நிர்வாக செயலாளருமான ஜெயகாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகம்: வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு டக்ளஸ் தேவானந்த...
நாடு உல்லாசப் பிரயாணத் துறையின் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
படகுகளில் கடற்றொழிலுக்கு செல்வோரின் எண்ணிக்கையை தொழிலாளர்களே தீர்மானிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ந...