Home English Tamil
     
   
 
 சவுதி குவைட் அரசாங்கங்களின் உதவியுடன் பாரிய மொரகஹாகந்த - களுகங்கை நீர்த்தேக்க நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
 08.02.2010 - திங்கட்கிழமை 
 
விவசாய குடிநீர் நீர்மின் உற்பத்தி திட்டங்களை உள்ளடக்கிய மொரகஹாகந்த - களுகங்கை நீர்த்தேக்க நிர்மாணப்பணிகளுக்காக சவுதி அரேபிய அபிவிருத்தி நிதியம் நிதி வழங்க முன் வந்துள்ளது.

மேற்படி திட்டத்திற்காக மொத்தம் 11 கோடி 30 லட்சம் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகையில் சவுதி அரேபியா 4 கோடி 60 லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ள அதேவேளை குவைட் 3 கோடி 70 லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்க திட்டத்திற்காக தேவைப்படும் மிகுதியான நிதி 3 கோடி அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவை அமைச்சின் செயலாளர் எஸ்.அமரசேகர தலைமையிலான நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று தற்சமயம் சவுதி அரேபியா சென்றுள்ளது. இக்குழுவினர் அரேபிய அபிவிருத்தி நிதியத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நேற்று விரிவாக ஆராய்ந்துள்ளனர். களுகங்கை நீர்த்தேக்க தி;ட்டத்திற்கான தொழிநுட்ப மற்றும் மாதிரி ஒப்பந்தம் உட்பட பலதரப்பட்ட விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரகஹாகந்த - களுகங்களை நீர்தேக்க திட்டம் நிறைவடைந்த பின்னர் கிழக்கு மாகாண விவசாயிகள் வரட்சியான காலங்களிலும் தமது போக பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொன்னறுவை அநுராதபுரம் திருகோணமலை மாத்தளை மாவட்டங்கள் உள்ளடங்கும் வகையில் குடிநீர் விநியோகத்தையும் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அணைக்கட்டுடன் இணைந்துள்ள மின்விநியோக நிலையத்தின் ஊடாக 20 மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.