20.08.2008 - புதன்கிழமை
வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களை விடுவிப்பதற்கான அழுத்தத்தைச் சர்வதேச சமூகம் புலிகளுக்குக் கொடுக்க வேண்டும் என அரசாங்க சமாதானச் செயலகத்தின் தலைவர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
வன்னிப் பகுதி மக்கள் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, அங்குள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் அரசாங்கத்திற்கு இருப்பதால், இடம்பெயர்ந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி மீளக் குடியமர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வன்னிப் பகுதி மக்கள் விடுவிக்கப்பட்டால், அவர்களைப் பாதுகாப்பான சூழலில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் தயாராகவிருப்பதாகவும், ஆனால் புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் பலவந்தமாகத் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்து அங்கிருந்து வெளியேற முடியாதிருக்கும் மக்கள் போதியளவு மனித நேய உதவிகளைப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை அனுப்பும் ஒரே நாடு இலங்கை எனவும், அவ்வாறு அனுப்பப்படும் பொருட்களிலிருந்து புலிகளே நன்மையடைகின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிவதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவித்தார்.
|