சிவஸ்ரீ மகாதேவக் குருக்களுக்கு சமஸ்கிருத கலாநிதி பட்டம்! அமைச்சர் அவர்களால் கௌரவிப்பு
05.02.2012 - ஞாயிற்றுக்கிழமை
காயத்திரிபீட அதிபர் சிவஸ்ரீ மகாதேவக் குருக்களுக்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சமஸ்கிருத கலாநிதி என்னும் பட்டமளித்து கௌரவித்துள்ளார்.
கோண்டாவில் மேற்கு அருள்மிகு சிறீ சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேக இறுதி நிகழ்வில் இன்றைய தினம் கலந்து கொண்ட போதே இக்கௌரவிப்பு வழங்கப்பட்டது.
முன்பதாக ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்து கொண்ட அமைச்சர் அவர்களுக்கு இதன் போது அந்தணர் சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
12 ஆண்டுகளுக்கொரு தடவை நடைபெறும் மகா கும்பாபிஷேகம் இவ்வருடம் கடந்த மாதம் 30ம் திகதி ஆரம்பமாகி 07ம் நாளான இன்றைய தினம் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் பெருமையினையும் தனித்துவத்தினையும் கட்டிக்காப்பது மாணவர்களின்
பொறுப்பே! - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
05.02.2012 – ஞாயிற்றுக்கிழமை
ஒரு பாடசாலையின் பெருமையினையும் அதன் தனித்துவத்தினையும் தொடர்ந்தும்
கட்டிக்காப்பது மாணவர்களின் மிகப்பெரிய பொறுப்பாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக்
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்
தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மை
போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ஒழுக்கம் என்பது மிகவும்
முக்கியமானது அதுவும் மாணவர்களிடம் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டிய
விடயம். எனவே ஒரு ஒழுக்கம் உள்ள மாணவர் சமுதாயத்தின் மூலம் எதிர்காலத்தில்
நல்லதொரு சமூகத்தை ஏற்படுத்த வேண்டியது இன்றைய காலத்தின் தேவை. இந்த
பாடசாலை பல அறிஞர்களை புத்திஜீவிகளை பல உயரதிகாரிகளை உருவாக்கிய
பெருமைக்குரிய பாடசாலை. எனவே இப்பாடசாலையின் ஒரு பழைய மாணவன் என்ற வகையில்
நான் அன்போடு கேட்டுக் கொள்வது பாடசாலையின் பெருமையினை கட்டிக்காக
மாணவர்கள் முன்வரவேண்டும்.
கடந்த கால யுத்தசூழல் வடமாகாண கல்வித்துறையில் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கருத்தில் எடுத்தே வடக்கு மாகாண சபை வடமாகாண
கல்வித் துறையின் அபிவிருத்தியில் விசேட கவனம் செலுத்தி பல நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறது. நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படுகின்ற கல்வித்
துறையின் நிலைமைகளுக்கு ஏற்ப வடமாகாண கல்வித் துறையினையும் மாற்ற வேண்டும்
என்பதே எமது நோக்கம்.
அந்த வகையில் இப்பாடசலையின் வளப்பிரச்சினைகள் குறித்தும் கவனத்தில்
எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்
வளம் என்பது தேவைக்கு அதிகமாகவே உள்ளது. ஆனால் பௌதீக ரீதியான வளத்தேவையே
மிகவும் அதிகளவு உணரப்பட்டுள்ளது.
எனவேதான் இந்த பாடசாலையின் பௌதீக ரீதியான வளப்பிரச்சினையை தீர்க்கும்
வகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உதவியின் கீழ் ஆரம்ப பாடசாலையின்
கட்டிடத் தொகுதியினை திருத்துவதற்கு 50 இலட்சம் ரூபாவும் மாணவர் விடுதி
புனரமைப்புக்கு 28 இலட்சம் ரூபாவும் 18 வகுப்பறைகளைக் கொண்ட மூன்று மாடி
கட்டிடம் ஒன்று அமைப்பதற்கு 210 இலட்சம் ரூபாவும் மொத்தமாக 288 இலட்சம்
ஓதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பாராளுமன்ற
உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் இப்பாடசாலையின் பழைய மாணவர்கள்
பாடசாலையின் அபிவிருத்தியின் தூண்கள் எனவும் குறிப்பிட்டார். அத்தோடு
மாணவர்கள் இந்த வளங்களை நன்கு பயன்படுத்தி சாதனை மாணவர்களாக திகழ வேண்டும்
எனவும் கேட்டுக்கொண்டார்.
பாடசாலை முதல்வர் திரு.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப்
போட்டி நிகழ்வில் வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன்
சோமராஜா உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வி அன்னமலர் தமிழ் பாட உதவிக்
கல்விப் பணிப்பாளர் திருமதி உதயகுமார் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர்
சந்திரகுமார் பழைய மாணவர் சங்கத் தலைவர் தயாபரன் அயற்பாடசாலை அதிபர்கள்
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் எனப் பலர் கலந்து
கொண்டனர்.
மக்களிடம் காணப்பட்ட சேமிப்பு பழக்கமே நெருக்கடியான காலத்தில் அவர்களை பாதுகாத்தது - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
05.02.2012 - ஞாயிற்றுக்கிழமை
எமது மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் காணப்படும் சேமிப்பு பழக்கமே அவர்களை நெருக்கடியான காலத்திலும் பாதுகாத்தது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்று (4) கிளிநொச்சி காந்திகிராம பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீள் எழுச்சி திட்டசிறு குழுக்களில் திறமையான சேமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட குழுக்களை கௌரவித்து அவர்களுக்கு பரிசளிக்கின்ற நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் மிக கொடிய யுத்தம் நடைபெற்ற வேளை உணவு விநியோகங்கள் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் எமது மக்களில் எவரும் பட்டினியால் இறக்கவில்லை என்பது மக்களிடம் காணப்பட்ட சேமிப்பு பழக்கத்தின் வெற்றியே எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இவ்வாறான திட்டங்களும் எமது மக்களின் சேமிப்பு பழக்கத்தை மேலும் ஊக்குவிப்பதோடு ஒரு வெற்றிகரமான திட்டமாகவும் பயணித்துக்கொண்டிருக்கிறது இது ஒருவரின் சுய பொருளாதாரம் கிராம மட்ட பொருளாதாரம் படிப்படியான பொருளாதார வளர்ச்சிக்கு வழிசமைக்கிறது அதனை வி;ட அரசும் கிராமங்களின் வளர்ச்சிக்கு என பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம் பல அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன
குறிப்பாக இவ்வருடம் இந்த பிரதேசத்தின் பல மில்லியன் ரூபா அபிவிருத்திக்கு செலவு செய்யப்படவுள்ளது அதாவது கோணாவில் சிவநகர் பாலம் அமைப்புக்கு 300 இலட்சம் ரூபாவும் கோணாவில் அக்கராயன் பாலத்திற்கு 400 இலட்சம் ரூபாவும் ஊற்றுப்புலம் இணைப்பு பாலம் 500 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு டிப்போ-ஸ்கந்தபுரம் வீதியில் முதற்கட்டமாக எட்டு கிலோமீற்றர் பகுதி புனரமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது எனவே இவ்வாறு பல்வேறு அபிவிருத்திப் பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகிறது
மேலும் சமுர்த்தி இந்த மாவட்டத்தில் முதற்தடவையாக கொண்டுவரப்பட்டுள்ளது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதியிடம் விடுத்து வந்த கோரிக்கைக்கு அமைவாக சமுர்த்தி இந்த மாவட்டத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது மேலும் சமூக சேவைகள் அமைச்சின் ஊடாகவும் வயோதிபர்கள் அங்கவீனர்கள் பெற்றோரை இழந்த சிறுவர்கள் ஆகியோருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்
அடுத்து இந்நிகழ்வில் உரையாற்றிய கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் திரு சுப்பையா அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையில் அந்த மக்களுக்கு எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையிலேயே காணப்படுகின்றோம் வெட்கத்தைவிட்டு இந்த இடத்தில் ஒன்றை கூற விரும்புகின்றேன் எங்களுடைய பிரதேசத்திற்கு அரை கிலோமீற்றர் வீதியினை புனரமைக்கவே கரைச்சி பிரதேச சபை நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது இது எங்களுடைய நிலைமை எனவே நான் அன்போடு எமது பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் கடந்த காலங்களில் தாங்கள் இந்த பிரதேசத்தின் அபிவிருத்தியில் காட்டிய ஆர்வத்தை தொடர்ந்தும் செலுத்த வேண்டும் குறிப்பாக எமது கல்வித்துறையின் அபிவிருத்திக்கு அதிக பங்களிப்பு செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்
இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை எதிர்கட்சி உறுப்பினர்களான திரு.இராமச்சந்திரன் திரு. கிருஸ்ணசாமி மற்றும் மீள் எழுச்சித்திட்ட பிரதி திட்டப்பணிப்பாளர் விஜயகிருஸ்னண் கிராம அலுவல்ர் அருந்தமிழ்;ச்செல்வன் ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் கட்சியின் பிரதேச தொடர்பாளர் தில்லைவேல் கிராம மட்ட அமைப்புக்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
சிறுவர் துஷ்பிரயோகத்தை தவிர்ப்பதற்கு நடவடிக்கை
05.02.2012 - ஞாயிற்றுக்கிழமை
சிறுவர் துஷ்பிரயோகத்தை தவிர்ப்பதற்காக சிவில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சிவில் பாதுகாப்பு படையினருடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக அதிகார சபையின் பிரதித் தலைவர் நந்தா இந்திரவங்ச தெரிவித்துள்ளார்.
கிராமிய மட்டத்தில் பாதுகாப்பற்ற முறையிலுள்ள சிறுவர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வது மற்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க சிவில் பாதுகாப்பு படையினருக்கு முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகத்தை தவிர்த்து கொள்வதற்கு பெரியவர்களின் ஒத்துழைப்பை நாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வான் பகுதி மாசுபடுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை
05.02.2012 - ஞாயிற்றுக்கிழமை
வான் பகுதியை மாசுபடுத்தும் நடவடிக்கையை தவிர்ப்பதற்கான சட்டத்தை வகுப்பது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளது.
வான் பகுதியில் பதாகைகள் காட்சிப்படுத்தப்படுவதனால் வான் பகுதி மாசுபடுத்தப்படுவதாக அதிகார சபையின் தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நகர பகுதிகளிலுள்ள சிறிய வான் பரப்புக்குளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இவ்வாறான பதாகைகள் காட்சிப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சரித ஹேரத் கூறியுள்ளார்.
வான் பரப்பிற்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகள் குறித்து நாட்டில் இதற்கு முன்னர் எவ்வித வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சரித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கு புதிய எச்சரிக்கை
04.02.2012 - ஞாயிற்றுக்கிழமை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் சாரதிகள் 100 கிலோ மீற்றர் வேகத்தை விஞ்ச வேண்டாம் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விபத்தொன்றில் 26 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் போது மது அருந்திய நிலையிலோ உறக்கத்துடனோ வாகனம் செலுத்த வேண்டாம் எனவும் ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் 1969 எனும் அவசர சேவை தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்கலாம் எனவும் அப்போது அம்புலன்ஸ் பொலிஸ் அல்லது ஏனைய சேவைகள் கொண்ட குழுவொன்று தேவையான இடத்துக்கு அனுப்பப்படும் எனவும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அதிகாரி ஒருவர் கூறினார்.
மும்மொழிச் சங்கங்கள் ஸ்தாபிக்க நடவடிக்கை
04.02.2012 - ஞாயிற்றுக்கிழமை
மும்மொழி தேர்ச்சியை வழங்குவதற்காக நாடளாவிய ரீதியாக மொழிச் சங்கங்கள் ஸ்தாபிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு அமைய ஏற்கனவே நாடளாவிய ரீதியாக 60 சங்கங்களுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய மொழிப் பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு மட்டுமல்லாது எதிர்காலத்தில் இந்த திட்டத்தை பொதுமக்களுக்கு இடையேயும் விஸ்தரிப்பது குறித்து ஆராயப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முக்கோண போட்டிகள் இன்று
04.02.2012 - ஞாயிற்றுக்கிழமை
இலங்கை இந்தியா அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் கலந்து கொள்ளும் முக்கோண வெற்றிக் கிண்ண ஒரு நாள் கிரிக்கற் போட்டித் தொடர் இன்று அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகின்றது.
அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டி அவுஸ்திரேலிய மெல்போனில் நடைபெறவுள்ளது.
அதேவேளை இலங்கை இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டி எதிர்வரும் புதன் கிழமை நடைபெறவுள்ளது.
கண்டியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!
04.02.2012 - ஞாயிற்றுக்கிழமை
ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த ஒருவரை கண்டி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
கைதி செய்யப்பட்ட நபரிடம் இருந்து 160 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி நகரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய ஒருவரை விசாரித்த போது இது கைப்பற்றப்பட்டது.
இவர் சிறிய பொலித்தீன் பை ஒன்றினுள் இந்த போதை வஸ்தை வைத்து தமது தொண்டையினுள் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பழவகைகளை பழுக்க வைப்பது தொடர்பில் விளக்கம்
04.02.2012 - ஞாயிற்றுக்கிழமை
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில் பழவகைகளை பழுக்க வைப்பது தொடர்பாக வர்த்தகர்களுக்கும் இறக்குமதியாளர்களுக்கும் விளக்கமளிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
உணவு சட்டத்தின் பரிந்துரைக்கு அமைய எத்தரல் எனும் இரசாயனத்தின் வாயுவை பயன்படுத்தி பழவகைகளை பழுக்க வைக்க முடியும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் அநேகமானவர்கள் பழவகைகளை பழுக்க வைப்பதற்கு கார்பைட் கற்களை பயன்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பழுக்க வைக்கப்படும் பழவகைகளை உட்கொள்வதால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதென கண்டறியப்பட்டுள்ளது.
இதனைக்கருத்திற்கொண்டு உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில் பழவகைகளை பழுக்க வைப்பது தொடர்பாக பழவகை இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு செய்கையாளர்களுக்கு விளக்கமளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
யாழ் தீவகத்தில் சுதந்திரதின நிகழ்வு
04.02.2012 - சனிக்கிழமை
இலங்கையின் 64ஆவது தேசிய சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வுகள் தீவகத்தின் ஊர்காவற்துறை வேலணை நெடுந்தீவு பகுதிகளிலும் நடைபெற்றன.
இந்த நிலையில் இலங்கையின் 64ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊர்காவற்துறை பிரதேச சபையில் சுதந்திரதின நிகழ்வு ஊர்காவற்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஜெயகாந்தன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
தேசியக் கொடியினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊர்காவற்துறை இணைப்பாளரும் ஊர்காவற்துறை பிரதேச சபைத் தவிசாளருமான ம.ஜெயகாந்தன் ஏற்றி வைத்தார்.
அத்துடன், வேலணை பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபைத் தவிசாளருமான சிவராசா (போல்) தலைமையிலும் நடைபெற்றன. தேசியக் கொடியினை பிரதேச சபைத் தவிசாளர் ஏற்றி வைத்தார்.
இதேவேளை, நெடுந்தீவு பிரதேச சபையில் ஈ.ழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை தவிசாளருமான றெக்சியன் தலைமையில் தேசியக் கொடிய ஏற்றி வைக்கப்பட்டு சுதந்திர தின வைபவங்கள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேச சபை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்காவற்துறை பிரதேச சபையில்
வேலணை பிரதேச சபையில்
நெடுந்தீவு பிரதேச சபையில்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 03.02.2012ம் திகதி கலந்து கொண்ட சில நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு.!...
04.02.2012 - சனிக்கிழமை
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 03.02.2012ம் திகதி கலந்து கொண்ட சில நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி அனுராதபுரத்தில் இடம்பெற்ற இந்துசமய நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்பு!
04.02.2012 - சனிக்கிழமை
இலங்கையின் 64வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறப்பு பூசை வழிபாட்டில் பங்கேற்றார்.
அனுராதபுரம் கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் நாட்டின் அபிவிருத்திக்கும் வளமான எதிர்காலத்திற்காகவும் அனுராதபுரம் கதிரேசன் ஆலய பிரதம குரு விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டமை விசேட அம்சமாகும்.
சர்வதேசத்தோடு இணைந்து பயணிக்க ஆங்கிலமொழி அவசியம் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்
04.02.2012 – சனிக்கிழமை
சிங்களம் மட்டும் என்ற சட்டத்தின் மூலமே இத்தேசத்தில் இன முரண்பாடுகள் கூர்மையடைந்தன. ஆனால் இன்று மும்மொழிக் கொள்கையை அமுலாக்கும் நடவடிக்கையை அரசு முன்னெடுத்து வருகின்றது என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்று (3) பளையில் உதயம் ஆங்கிலமொழி சிறுவர் பாடசாலையினை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் சிங்களம் மட்டும் என்ற சட்டத்தின் மூலமே இத்தேசத்தில் இன முரண்பாடுகள் கூர்மையடைந்தன. ஆனால் இன்று மும் மொழிக் கொள்கையை அமுலாக்கும் நடவடிக்கையை அரசு முன்னெடுத்து வருகின்றது. இதன் மூலம் எதிர்காலத் தலைமுறையினர் மூன்று மொழிகளையும் அறிந்தவர்களாகவும் ஆங்கிலத்தை தொடர்பாடல் மொழியாகவும் மாற்றக்கூடிய ஒரு புதிய சூழல் உருவாகியுள்ளது. இந்த அடிப்படையில் ஆங்கில மொழியறிவை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு மீள்குடியேறிய மிகவும் பின்தங்கிய பளை போன்ற பிரதேசங்களில் ஏற்படுத்தப்படுவது மகிழ்ச்சிக்குரிய விடயமே. இதேபோன்று ஏனைய பகுதிகளிலும் ஆங்கில மொழியறிவை வளர்க்கக்கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அத்தோடு நாம் தமிழ் மொழியை பேசுகின்றோம் அதைபாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடமுண்டு. ஆனால் இன்று உலகம் ஆங்கில மொழியில் முக்கியத்துவம் பெற்று வருகின்றது. எனவே எமது தாய் மொழியை பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளை சர்வதேசத்தோடு இணைந்து பயணிக்கக் கூடிய ஆங்கில அறிவையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் நாம் உணர்ந்து கொள்ளவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் மேலும் தெரிவித்தார.;
புலோப்பளையில் உதயம் ஆங்கிலமொழி சிறுவர் பாடசாலையினை பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள் திறந்து வைத்தார். பளைப் பிரதேசத்தில் முதன் முறையாக ஆரம்பமாகியுள்ள இவ் ஆங்கிலமொழி சிறுவர் பாடசாலையானது முதற்கட்டமாக 25வரையான மாணவர்களை உள்வாங்கவுள்ளதுடன் தொடர்ந்து படிப்படியாக மேலும் பல மாணவர்களை உள்வாங்கக் கூடிய வகையில் விரிவாக்கப்படவுள்ளதாக அப்பாடசாலையின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் அன்ரன் அன்பழகன் பச்சிலைப்பள்ளி ப.நோ.கூ சங்க பொது முகாமையாளர் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் முன்பள்ளி சிறார்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாணும் சக்தி நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கே உண்டு - ஜனாதிபதி
04.02.2012 - சனிக்கிழமை
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் சக்தி நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு மாத்திரமே உண்டு. இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது அனைத்து கட்சிகளின் பாரிய பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 64ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் அநுராதபுரத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் 5ஆம் நூற்றாண்டில் முக்கியத்துவம் வாய்ந்த நகரில் நாம் இன்று 64ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றோம். நாட்டுக்காக உயிரிழந்த படையினர் மற்றும் பொதுமக்களுக்கு இவ்விடத்தில் நின்று என் கௌரவத்தை சமர்ப்பிக்கிறேன்.
சுதந்திரம் என்பது இன்று எமது முன்னுள்ள பாரிய பொறுப்பாகும். அதனைக் கட்டிக்காக்க வேண்டிய கடமை எம் அனைவருக்கும் உள்ளது. யுத்தத்தைக் காரணம் காட்டி சுதந்திரத்தை மறக்கடித்த நிலைமை அன்று இருந்தது. இன்று யுத்தத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்ட மண்ணிலிருந்து சுதந்திரத்தைக் கொண்டாடுமளவுக்கு நாம் வந்துள்ளோம். கிராமத்தைப் பாதுகாக்க பதுங்கு குழிகளையும் துப்பாக்கிகளையும் கேட்டிருந்த மக்கள் இன்று அபிவிருத்தி, சுதந்திரம் மற்றும் பரிசுத்தமான நாட்டை வேண்டி நிற்கின்றனர்.
நாம் இன்று நீண்டதூரம் பயணிக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். எமது பாரிய அபிவிருத்திகளில் 80 சதவீதமானவை கிராமங்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன. கிராமங்களிலிருந்து தேசிய அபிவிருத்திக்கு இவற்றை இட்டுச் செல்ல வேண்டுமாயின் கல்வி, தொழில்நுட்பம், விஞ்ஞானம் என சகல துறைகளிலும் எமக்கு தோள் கொடுக்க வேண்டும். உலக பொருளாதார நெருக்கடி இலங்கைகையும் பாதிக்கும். இருப்பினும் எமது எழுச்சி அவற்றைச் சமாளித்துள்ளன. பாரிய உணவு நெருக்கடிக்குள் சிக்கியுள்ள உலக நாடுகளுக்கு உதவி செய்யும் சக்தியும் எமக்கும் எமது நாட்டு மக்களுக்கும் உண்டு. எமது சக்தியை தொடர்ந்து நாம் காட்ட வேண்டும். பொருளாதார சுதந்திரம் மூலம் அதனை எம்மால் செய்ய முடியும்.
இலவச கல்வி, சுகாதாரம் முறைமையை தொடர்ந்து பேணுவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர இலவச கல்வித்திட்ட சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியபோது, எஸ்.ஏ. விக்கிரமசிங்க, என்.எம். பெரேரா, ஜே.ஆர்.ஜெயவர்தன, டி.ஏ. ராஜபக்ஷ உட்பட பலர் அதனை ஆதரித்தனர். எமது மக்களுக்கான இலவச கல்வியைiயும் இலவச சுகாதார திட்டங்களையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல நாம் உறுதிபூண்டுள்ளோம்.
எமக்கு எதிராக வெளிநாடுகளிலுள்ள பயங்கரவாத சக்திகள் பல்வேறு பொய் பிரசாரங்களையும் சதி வலைகளையும் பின்னி வருகின்றன. இங்குள்ள சிலரும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். சில நாடுகளில் இடம்பெற்ற பிரிவினைவாதத்தினை இலங்கைக்குள்ளும் நடத்துவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.
நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்துவது தனியொருவரினால் செய்யக்கூடியது அல்ல. அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த உண்மையை புரிந்துகொள்ளவும் வேண்டும். வெளிநாடுகளிலிருந்து உதவிகளைப் பெறுபவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டுக்கும் நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் பொதுவான நிரந்தரமான சமாதானக் கொள்கையொன்றை ஏற்படுத்த வேண்டும்.
இலங்கையில் எந்தவொரு பிரதேசமும் எந்தவொரு இனத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. முழுநாடுமே அனைத்து எல்லோருக்கும் எல்லாம் பொதுவானது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது அறிக்கையில் கடந்தகால பிரச்சினைகளுக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டுமெனத் தெரிவித்திருந்தது. எமது மனசாட்சியின்படி நாம் அனைவரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்த டிசெம்பர் மாதம் 17ஆம் திகதி இந்த ஆணைக்குழு தனது பரிந்துரைகளை வெளியிட்டது. அதன் பரிந்துரைகளை ஏற்று குறுகிய காலத்திற்குள். அதாவது கடந்த 6 வார காலங்களாக நாம் அவற்றை நிறைவேற்றியே வருகின்றோம்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும்போது சர்வஜன வாக்குகளால் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத்தினை ஒதுக்கி வைத்துவிட்ட எம்மால் முடியாது. நாட்டின் நீதி, சட்டம் அனைத்துக்கும் நாம் அடிபணிவதுபோன்றே ஜனநாயக சக்தியான நாடாளுமன்றுக்கும் நாம் கட்டுப்பட்டு செயற்பட வேண்டும்.
சர்வஜன வாக்குகளினால் மாத்திரமே ஓர் அரசாங்கத்தினை கவிழ்க்கும் கட்டுப்பாட்டுக்குள் நாம் உள்ளோம். அதை நாம் பாதுகாக்க வேண்டும். அந்தவகையில் ஜனநாயக நீரோட்டத்தில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் சக்தி நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு மாத்திரமே உண்டு. இதில் கலந்துகொண்டு அனைத்து பிரச்சினைகள் குறித்தும் செவிமடுத்து, மக்கள் தேவைகளை கவனத்திற்கொண்டு பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொறுப்பு அனைத்து கட்சிகளுக்கும் உண்டு. எனவே அனைத்து கட்சிகளும் இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெற்று தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் அனைத்து தடுப்பூசிகளையும் பரிசோதனைக்குட்படுத்தத் தீர்மானம்
04.02.2012 - சனிக்கிழமை
இறக்குமதி செய்யப்படும் அனைத்து தடுப்பூசிகளையும் மருத்துவ ஆய்வு நிலையத்தினூடாக பரிசோதனைக்கு உட்படுத்த தேசிய ஒளடதங்கள் அதிகார சபை தீர்மானித்துள்ளது.
தடுப்பூசிகளின் தரத்தைக் கண்டறியும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகார சபையின் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த பெனரகம தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் இறக்குமதி செய்யும் தடுப்பூசிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்ற போதிலும் தனியார் துறையினர் இறக்குமதி செய்யும் தடுப்பூசிகள் இதுவரை காலமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து பயன்படுத்தப்படும் வரை உரிய வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்படாவிட்டால் அதன் தரத்தில் மாற்றம் ஏற்படலாம் என தேசிய ஒளடதங்கள் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் தடுப்பூசிகளையும் மருத்துவ ஆய்வு நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர் சந்தைக்கு விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மீன்பிடி வரைபடம்
04.02.2012 - சனிக்கிழமை
ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் துணையுடன் இலங்கையின் கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவராண்மையும் (நாரா) இலங்கையின் முதலாவது தொகுதி மீன்பிடி வரைபடத்தை உருவாக்கியுள்ளன.
முதலாவது மீன்பிடி வரைபடத்தை இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான பிரதிநிதி பட்ரிக் இவான்ஸ் கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தமித்த டி சொய்சாவிடம் கையளிக்கப்பட்டது.
இந்த வரைபடமானது பல வண்ணங்கள் அலங்கரிக்கக்கூடியவாறு இலங்கையின் தேசிய நிலவரைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் வடமேற்கு தெற்கு கிழக்கு கரையோரங்களில் கடற்பாசி சிங்கி இறால் கூனி இறால் சமுத்திரவியல் அலங்கார மீன்வகைகள் போன்ற வணிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஏற்றுமதி சார்ந்த வளங்கள் பற்றிய ஆய்வுகள் மற்றும் முகாமைத்துவ திட்டங்களை உள்ளடக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாகும்.
இதற்கு கனேடிய சர்வதேச அபிவிருத்தி முகவராண்மை (சீடா) விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் ஆகியவற்றினால் அமுலாக்கப்படும் திட்டங்கள் மூலம் நிதி வழங்கப்பட்டதுடன் உணவு விவசாய ஸ்தாபனம் மூலமாக தொழில்நுட்ப உதவி வழங்கப்பட்டது. இவற்றின் ஊடாக இந்த வளங்களின் வியாபகம் மிகையான தன்மை பற்றி பரந்த ஆய்வை நடத்த தேசிய நீரியல்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவராண்மைக்கு (நாரா) வழிகிடைத்தது. தேசிய நீரியல்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவராண்மையும் (நாரா) கடற்றொழில் நீரியல்வள திணைக்களமும் இத்தகைய பெறுமதியான வளங்களை நிலைபேறான வகையில் பயன்படுத்துவதற்குரிய முகாமைத்துவ திட்டங்களை வடிமைக்கும் முயற்சிகளில் கடற்றொழில் துறையில் சம்பந்தப்பட்டுள்ள மீனவ சமூகங்கள் வர்த்தர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களை சிறப்பான முறையில் ஒன்றுபடுத்தியிருக்கின்றன.
மீன்பிடி வரைபடத்தில் வர்ணமயமான புகைப்படங்கள் நிலவரைகள் போன்றவை அடங்கியுள்ளன. இந்த வரைபடம் வடமேற்கு தெற்கு கிழக்கு கரையோரங்களில் கடற்பாசி சிங்கி இறால் கூனி இறால் சமுத்திரவியல் அலங்கார மீன்வகைகள் போன்றவை பற்றிய பெருமளவு தரவுகளையும் தகவல்களையும் கொண்டுள்ளது. இது கடற்றொழில் நீரியல்வள அமைச்சு கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அமுலாக்கும் உணவு விவசாய ஸ்தாபன நிறுவனத்தின் மற்றொரு பிராந்திய திட்டமான பிராந்திய கடற்றொழில் வாழ்வதாரத் திட்டம் வழங்கிய நிதியுதவியுடன் அச்சிடப்பட்டுள்ளது.
சிறீலங்கன் விமான சேவையில் மேலும் புதிய விமானங்கள்
04.02.2012 - சனிக்கிழமை
2015 ஆம் ஆண்டில் சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது விமானங்களின் எண்ணிக்கையை 30 ஆக அதிகரிக்கவுள்ளது.
இந்த விமானங்களை இயக்குவதற்கு அனுபவமும் திறமையுமிக்க விமான ஓட்டிகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆளணியில் சேர்த்துக் கொள்ளும் பணியை சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இப்பிராந்தியத்தில் சிறந்த விமான சேவையாக சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை ஏற்படுத்துவதே இதன் குறிக்கோளாகும். சமீபத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் கெடெட் பைலட்மார் குழுவொன்றை தெரிவு செய்து அவர்களுக்கு விமானம் ஓட்டுவதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கியது.
கொழும்பு நகர அபிவிருத்திக்கு சர்வதேச வங்கியிடமிருந்து நிதி
04.02.2012 - சனிக்கிழமை
கொழும்பு நகர அபிவிருத்திக்கு சர்வதேச வங்கியினூடாக 213 மில்லியன் டொலர் நிதி உதவி பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிதி கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் ஏற்படும் வெள்ள நிலைமை மற்றும் பொருளாதார செயற்பாடுகளை மேம்படுத்தும் கொழும்பிலுள்ள காணிகளை அபிவிருத்தி செய்தல் ஆகிய நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் வடிகாலமைப்புகளையும் வாவிகளையும் புனரமைத்தல், கவனம் செலுத்தப்படாத சதுப்பு நிலங்களை அண்மித்த பகுதிகளில் இயற்கை பூங்காக்களை அமைத்தல் என்பனவும் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினூடாக ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் இந்தத் திட்டம் 3 வருடங்களில் நிறைவு செய்யப்படும்.
கண்டி - மஹியங்கனை வீதியில் மண்சரிவு அபாயம்
04.02.2012 - சனிக்கிழமை
மண்சரிவு அபாயம் காரணமாக கண்டி - மஹியங்கனை வீதியின் 18ஆம் வளைவுப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அதிக மழை காரணமாக அந்த வீதியின் 52ஆவது மைல் கல்லுக்கு அருகில் மண்சரிவு அபாயம் நிலவுவதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.