Home English Tamil
     
   
 
 கிளிநொச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
 02.08.2010 - வியாழக்கிழமை

யுத்தத்தால் அழிவடைந்திருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தை மீளக்கட்டியமைக்கவும் யுத்த் காலத்தில் மக்களுக்குப் பணியாற்றியதைப் போல இப்போது மீள்குடியேற்றத்தின் போதும் அர்ப்பணிப்புடன் உழைக்க சகலரும் முன்வர வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி  பிரதேச செயலர் பிரிவில் இன்று (2) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தலைமைவகித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

மீள்குடியேற்றத்தில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்திருக்கின்றனர். பல்வேறு தேவைகளை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கின்றனர். எனவே மக்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுத்துவது அவசியமாகவுள்ளது. மக்களின் தொழில் வாய்ப்புகளை அதிகரித்து அவற்றுக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். இந்த மாவட்டத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்க அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் பொதுமக்கள் அமைப்புகளைச் சேர்ந்தோர் எனச் சகலரும் உழைக்க வேண்டும். இந்த மீள் கட்டமைக்கு எம்மாலான உதவிகளையும் முயற்சிகளையும் முழுமையாக வழங்குவோம் என்று சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் மேலதிக உதவி அரசாங்க அதிபர் வடமாகாண ஆளுநரின் பிரதிப் பிரதம செயலாளர் திணைக்களங்களின் தலைவர்கள் கிராம அலுவலர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் பொதுமக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகள் கேட்டறியப்பட்டு ஆராயப்பட்டு அவற்றுக்குத் தீர்வு காணப்பட்டன. இனங்காணப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் உடனடித் தீர்வுக்காக பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமர்ர் அவர்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிக்கப்பட்டது.

உட்கட்டமைப்புச் சம்பந்தப்பட்ட மின்சாரம் நீர் விநியோகம் வீதி மருத்துவம் கல்வி போக்குவரத்து ஆகியவற்றுடன் தொழில் முயற்சிகளான விவசாயச் செய்கை நன்னீர் மீன்பிடி வர்த்தகம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது.


















 தமிழ் மக்களின் அரசியல் மற்றும் வாழ்வியல் உரிமைகள் குறித்து இந்தியா உதவ வேண்டும்! இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் அவர்களிடம் தமிழ் கட்சிகளின் அரங்கம் நேரடியாக சந்தித்து பேச்சு!
 02.08.2010 - வியாழக்கிழமை

இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் அவர்களை இன்றைய தினம் (2) தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சந்தித்து விரிவான பேச்சுக்களை நடத்தியிருந்தது.
 
இன்று காலை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடந்த இச்சந்திப்பின்போது தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகள் மத்தியில் உரை நிகழ்த்திய இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் அவர்கள் கடந்த கால சூழ்நிலையில் இருந்து சமகால சூழ்நிலை என்பது மாறுபட்டது என்றும் சமகால சூழலை உணர்ந்து அதற்கேற்றவாறு ஜதார்த்தபூர்வமாக சிந்தித்து செயற்படுவதே பயனுள்ளதாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்ததோடு இவ்வாறு அனைத்துக் கட்சிகளும் ஐக்கியப்பட்டு செயற்படும் போது பெறவேண்டியவற்றை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் ஒற்றுமை முயற்சி குறித்தும் பாராட்டி பேசியிருந்தார்.

இதே வேளை அங்கு கருத்துத் தெரிவித்திருந்த தமிழ்க் கட்சிகளின் அரங்க பிரதிநிதிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் மற்றும் வாழ்வியல் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கான கோரிக்கையினை தாம் இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்து வருவதாகவும், அதை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இந்தியா அக்கறையோடு ஈடுபட்டு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இதே வேளை கடந்த (14.08.2010) அன்று மட்டக்களப்பில் நடந்த தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் தற்போது அங்கம் வகிக்கும் 9 தமிழ்க் கட்சிகளும் எடுத்த தீர்மானங்களையும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகள் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் அவர்களிடம் எடுத்து விளக்கியிருந்தனர்.

1.    அர்த்தமுள்ள மீள்குடியேற்றம்

2.    உட்கட்டமைப்புடன் கூடிய மீள்கட்டுமானம்

3.    உயர் பாதுகாப்பு வலயங்களைப் படிப்படியாக அகற்றல்

4.    மக்களின் வாழ்விடங்களில் அமைக்கப்பட்டுவரும் இராணுவக் குடியேற்றங்களைத்   தடுத்து நிறுத்தல்

5.    முழுமையான சிவில் நிர்வாகத்தினை ஏற்படுத்துதல்

6.    யுத்;தத்தினால் உடமைகளை உறவுகளை அங்கங்களை இழந்த மக்களுக்கு நட்ட ஈடுகளைப் பெற்றுக்கொடுத்தல்

7.    வடக்கு கிழக்கு உட்பட தமிழ் பேசும் பகுதிகளில் இனப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தளர்த்துதல்

8.    யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளைத் தளர்த்துதல்

9.    மீள் குடியேற்றத்தை வெளிப்படையாகச் செய்வதுடன் அதற்கு மக்கள் பிரதிநிதிகள் சர்வதேச உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளல்.

10.    தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகள் இறுதி யுத்த நடவடிக்கையின்போது சரணடைந்த கைது செய்யப்பட்ட போராளிகளின் விபரங்களை வெளிப்படுத்துவதுடன் அவர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தல்.

11.    இனப்பிரச்சினைத் தீர்வுக்கு மாகாணசபைக்கென பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்ற அரசியல் அமைப்பில் உள்ள 13வது அரசியல் அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துதல் ஆரோக்கியமான முன் முயற்சியாக அமையும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த விடயங்களே மட்டக்களப்பில் நடந்த தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தில் எடுத்த தீர்மானங்கள் என்றும் இவைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரியே தாம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாக தெரிவித்து அதற்கு இந்தியாவின் பங்களிப்பையும் கோரியிருந்தனர்.

இச்சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ராஜ்குமார் ராஜமாணிக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா சார்பில் சிறிதரன்  புளொட் சார்பில் சதானந்தம் ஈரோஸ் சார்பில் பிரபாகரன் நீதிராஜஸ்ரீ ஈழ எதிலியர் மறுவாழ்வுக் கழக சார்பில் சந்திரகாசன் பேரின்பநாயகம் த.தே.கூ.வி.மு சார்பாக சிவாஜிலிங்கம் சிறிரெலோ சார்பில் உயராசா சுரேந்திரன் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


 ஒருவர் எத்தனை தடவை பதவிவகிக்க வேண்டும் என்பதனை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் - டிலான் பெரேரா
 02.08.2010 - வியாழக்கிழமை

நாட்டிற்கு தற்போதைய நிலைமையில் மிகவும் பொருத்தமான அரசியலமைப்பு திருத்தங்களையே அரசாங்கம் முன்வைத்துள்ளது. ஒருவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகிக்கும் தடவைகளை கட்டுப்படுத்தும் அரசியலமைப்பு சரத்தை நீக்குவதற்கான திருத்த யோசனை சாலச் சிறந்த ஒன்றாகும் என்று பொது நிர்வாக பிரதியமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

காலத்துக்கு ஏற்ற மற்றும் நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்புத் திருத்தங்கள் சிலவற்றை மேற்கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.

ஒருவர் எத்தனை தடவை பதவிவகிக்க வேண்டும் என்பதனை நாட்டு மக்களே தீர்மானிக்கின்றனர். அதாவது இந்த இடத்தில் நாங்கள் மக்களின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளோம். மக்கள் விரும்பினால் ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதியாக பதவிவகிக்கலாம்.

மேலும் வடக்கு கிழக்கு மக்களுக்கும் இந்த விடயத்தில் எந்த சிக்கலும் இல்லை. அவர்கள் வேலைத்திட்டங்கள் இடம்பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். யுத்தம் முடிந்து விட்டது. தற்போதைய நிலைமையில் அபிவிருத்தியே தேவைப்படுகின்றது. அதனையே அந்த மக்களுக்கு நாம் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு பலமான அரசாங்கம் இருக்க வேண்டும். அவ்வாறான பலமான ஸ்திரமான அரசாங்கம் ஒன்றுக்காகவே அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்கின்றோம் என பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 சேமமடு பாலமோட்டையில் நடமாடும் சேவை
 02.08.2010 - வியாழக்கிழமை

வவுனியா மாவட்டத்தில் மீளக் குடியேறிய சேமமடு பாலமோட்டை கிராமங்களில் நடமாடும் சேவைகள் இன்றும் நாளையும் மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்படவுள்ளது.

இன்று 2 ஆம் திகதி சேமமடு மகாவித்தியாலயத்திலும் நாளை 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாலமோட்டை அரசினர் பாடசாலையிலும் நடமாடும் சேவைகள் இடம்பெறுமென மாவட்ட அரச அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் நடமாடும் சேவையின் போது வருகை தந்து தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாமெனவும் அவர் தெரிவித்தார்.


 குப்பை கொளுத்திய வேளை தீப்பற்றிய சிறுமி மரணம்
 02.08.2010 - வியாழக்கிழமை

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது குப்பை கொளுத்திய வேளையில் நெருப்பில் அகப்பட்டு எரிகாயங்களுக்குள்ளான கொடிகாமம் பாலாவி வடக்கைச் சேர்ந்த குணரத்தினம் சங்கீதா (வயது8) சிகிச்சை பயனின்றி மரணமானார்.

குப்பையைக் கொளுத்தியபோது சிறுமி அணிந்திருந்த நைலோன் சட்டையில் தீப்பற்றிவிட்டது. உடலில் எரிகாயங்களுடன் சிறுமி யாழ். போதனா வைத்திய சாலையில் கடந்த 27ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை  பயனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்தார்.


 கட்டுநாயக்க விமான நிலையத்தில் யூரோக்கள் கடத்த முயன்றவர் கைது!   
 02.08.2010 - வியாழக்கிழமை  

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 39 இலட்சம் ரூபா பெறுமதியான யூரோக்கள் கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மேற்படி யூரோக்களைச் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குக் கடத்த முயன்ற போதே இவர் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 பணவீக்கம் 5 சதவீத அதிகரிப்பு
 02.08.2010 - வியாழக்கிழமை

பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 5 சதவீதத்தால் அதிகரித்திருக்கிறது. தொடர்ச்சியாக 5 மாதங்கள் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் நாட்டில் நுகர்வோர் செலவிடும் தொகை அதிகரித்துள்ளது.

மத்திய வங்கியின் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட விபரங்கள் மூலம் முன்னைய மாதத்தைவிட ஆகஸ்ட் மாதம் சராசரி பணவீக்கம் அதிகரித்திருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


 சகல அபிவிருத்தித் திட்டங்களையும் குறித்த காலத்தில் நிறைவு செய்ய வேண்டும் - ஜனாதிபதி!
 02.08.2010 - வியாழக்கிழமை

சப்ரகமுவ மாகாணத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சகல அபிவிருத்தித் திட்டங்களையும் குறித்த காலத்தில் நிறைவு செய்ய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இது தொடர்பாக தாம் நேரடி அவதானத்தைச் செலுத்தி வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி குறிப்பாக சப்ரகமுவ மாகாண தோட்டப்புறங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமையளிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் தடைகள் நிதிப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இதன் போது ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேரடி வழிகாட்டல்களை வழங்கியதுடன் நிதி வழங்குவது தொடர்பில் மாகாண சபை அதிகாரிகளுக்கு நேரடி உத்தரவையும் வழங்கினார்.


 11 படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!
 02.08.2010 - வியாழக்கிழமை

11 படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் குறித்த நபர் 11 படுகொலைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாகவும் கொலை செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் பொலிஸார் எனவும் குறிப்பிடப்படுகிறது.

கொஸ்வத்த பிரதேசத்தில் வைத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மிக நீண்ட காலகமாக குறித்த நபர் தலைமறைவாக வாழந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


 வடபிரதேச மக்களின் உண்மையான பிரதிநிதிகள்
 02.08.2010 - வியாழக்கிழமை

ஒப்பீட்டளவில் வடபகுதி இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். அபிவிருத்தியில் பின்னடைவு. இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றத்தில் பின்னடைவு. நிர்வாகக் கட்டமைப்பிலும் பின்னடைவு. அண்மைக்கால யுத்தமே இந்த நிலைக்குக் காரணம் என்று பொதுவாகக் கூறப்படுகின்றபோதிலும் இப்பிரதேசத்திலிருந்து காலத்துக்குக் காலம் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமைகளின் தூர நோக்கற்ற செயற்பாடுகளே பிரதான காரணம்.

மற்றைய மாகாணங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தத்தமது பிரதேசத்தின் அபிவிருத்தியில் காட்டிய அக்கறையின் மிகச் சிறு பகுதியையாவது வட பிரதேச அரசியல் தலைவர்கள் காட்டவில்லை. அபிவிருத்தியில் வடக்கு பின்னடைவு கண்டதற்கு இது பிரதான காரணம்.

ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியில் அப் பிரதேச மக்கள் நே டியாகச் சம்பந்தப்படக் கூடியதான நிர்வாகக் கட்டமைப்பு பிரதான பங்களிப்புச் செய்யக்கூடியதாகும்.

மற்றைய மாகாணங்களில் இயங்கும் மாகாண சபைகள் இத்தேவையைப் பூர்த்தி செய்கின்றன. வடபகுதி அரசியல் தலைவர்கள் இத் தேவைக்கு முக்கியத்துவம் அளித்துச் செயற்படாததால் மக்கள் நேரடியாகச் சம்பந்தப்படும் நிர்வாகக் கட்டமைப்பு அங்கு இல்லாமற் போனது. மாகாண சபை நிர்வாகத்தை நிராகரித்ததன் பாரதூரமான விளைவை இப்போதாவது அத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும் இன்று சில முன்னேற்றமான காரியங்கள் இடம்பெறுகின்றன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் வட பிரதேசத்தின் பாரம்பரிய வளங்களை மையமாகக் கொண்ட அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேநேரம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியும் பெருந்தொகைப் பணச் செலவில் இடம்பெறுகின்றது. இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றத்திலும் அரசாங்கம் அக்கறை செலுத்துகின்றது.

இவை வட பிரதேச மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு எனக் கூறுவதற்கில்லை. ஆனால், வட பிரதேசத்தில் அத்தியாவசியமாக இடம்பெற வேண்டிய செயற்பாடுகள் என்பதில் யாரும் சந்தேகம் தெரிவிக்க முடியாது. இப்பிரதேச மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் இச் செயற்பாடுகளை வரவேற்பதுடன் ஊக்கமும் ஒத்துழைப்பும் அளிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் அபி விருத்திச் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ளாததாலோ அல்லது அகவய காழ்ப்புணர்வு காரணமாகவோ கண்டும் காணாதவர் போல் இருக்கின்றனர். குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதுடன் மக்கள் சார்ந்த தங்கள் கடப்பாடு நிறைவுறுகின்றது என்று இவர்கள் கருதுகின்றார்கள் போல் தெரிகின்றது.

வடபகுதி மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பான குறைபாடுகள் இல்லையென யாரும் கூற முடியாது. அக்குறைபாடுகளை வெளிப்படுத்தும் உரிமை மக்களின் பிரதிநிதிகளுக்கு இருப்பதை எவரும் மறுதலிக்கவும் முடியாது.

ஆனால் குறைபாடுகள் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் மாத்திரம் அவை தீரப்போவதில்லை. சரியான வழிமுறையைப் பின்பற்றித் தீர்வுக்காக முயற்சிக்கவும் வேண்டும். முன்னேற்றகரமான செயற்பாடுகள் இடம்பெறும்போது அவற்றுக்கு ஒத்துழைப்பு நல்கவும் வேண்டும்.

வடக்கின் வளர்ச்சிக்கும் அம் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளின் தீர்வுக்கும் உரிய வகையில் செயற்படுபவர்களே வட பிரதேச மக்களின் உண்மையான பிரதிநிதிகளாவர்.

நன்றி - தினகரன்


 சேவை மனப்பான்மையோடு கடமைகளைச் செய்யும் போதுதான் மக்களுக்கான பணிகளும் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 01.09.2010 - புதன்கிழமை

சேவை மனப்பான்மையோடு கடமைகளைச் செய்யும் போதுதான் மக்களுக்கான பணிகளும் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் செயலகத்தில் இன்று நடைபெற்ற நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

யுனிசெப் செயற்திட்டத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பெண்கள் வலுவிழந்தோருக்கான செயற்திட்டங்களை முன்னெடுக்கும் விதத்தில் உள்ளூராட்சி உதவி ஆணையகத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் ஒரு தொகுதியினருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

நியமனக் கடிதங்களை அமைச்சர் டக்ளஸ் தோனந்தா அவர்கள் வழங்கி வைத்தார்.

செயலக மண்டபத்தில் உள்ளூராட்சி சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி மதுமதியும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

















 ஈ.பி.டி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் புலவர் அரியநாயகத்தின் மனைவி காலமானார்!
 01.09.2010 - புதன்கிழமை

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் நெடுந்தீவு பிரதேச சபை முன்னாள் தலைவருமான புலவர் அரியநாயகத்தின் மனைவி திருமதி ஸ்ரெலா பராசக்தி கடந்த 30ம் திகதி கொழும்பில் காலமானார்.

இல 36 5ம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்குச் சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பூதவுடலுக்கு மலர்வளையம் வைத்து அணிவித்து இறுதியஞ்சலி செலுத்தினார்.

அத்துடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் கணவன் மற்றும் பிள்ளைகளுக்கு அமைச்சர் அவர்கள் தனது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.

அன்னாராது இறுதி நிகழ்வுகள் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











 எமது மக்கள் சுபீட்சமான சுதந்திரமான வாழ்வுக்கு வழிகோல அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 01.09.2010 - புதன்கிழமை

நடைமுறைக்குச் சாத்தியமான 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி அதன் மூலமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை காணமுடியுமென நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களுடனான இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழ் மாவட்டத்திலுள்ள 15 உதவி அரச அதிபர் பிரிவுகளில் 5 முதல் 50 வரையான அங்கத்தவர்களை இணைத்து அதன் மூலம் சமூக சேவை அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறாக சமூக அபிவிருத்திக் குழுக்களை ஒழுங்கமைப்பதன் ஊடாக அந்தந்த பிரதேச மக்களினது தேவைகளை இலகுவாக கண்டறிந்து அவற்றை சீர் செய்ய முடியும்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்பதற்காகவே தமிழ்க் கட்சியின் அரங்கம் உருவாக்கப்பட்ட போதிலும் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

நடைமுறைக்குச் சாத்தியமான 13வது அரசியல் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி அதன் மூலமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை காண முடியும் என நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றோம்.

அதற்கேற்ப தற்போது நல்லதொரு சூழ்நிலை உருவாகியுள்ளது இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் எமது மக்கள் சுபீட்சமான சுதந்திரமான வாழ்வுக்கு வழிகோல அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறு;பபினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் உதயன் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் உள்ளிட்ட ஈ.பி.டி.பி. பிரதேச பொறுப்பார்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

















 அமைச்சரின் உறுதிமொழியை அடுத்து யாழ் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் கடமைக்குத் திரும்பினர்!
 01.09.2010 - புதன்கிழமை

யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் ஒகஸ்ட் மாதத்திற்கான வாழ்க்கைப் படியை தரவேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கையினை முன்வைத்தனர்.

அவர்களது கோரிக்கையினை செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென உறுதி வழங்கினார்.

அமைச்சரின் உறுதிமொழியை அடுத்து ஊழியர்கள் மீண்டும் தமது கடமைக்கு திரும்பினர்.











 ஏ9 வீதியை புனரமைக்க சீனா 350 கோடி டொலரை வழங்கவுள்ளது!
 01.09.2010 - புதன்கிழமை


யாழ்ப்பாணம் கண்டி ஏ9 வீதியில் 32 கிலோமீற்றர் நீளப் பாதையை அபிவிருத்தி செய்வதற்கு 350 கோடி டொலர்களை (3.5 பில்லியன்) சீனா வழங்கவுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கிணங்க வட மாகாணத்தில் சீன நிதியுதவியுடனான பாரிய வீதிப் புனரமைப்புத் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தின் அநேகமான பகுதிகளை உள்ளடக்கியதாக இத்திட்டம் அமைவதுடன், நீண்ட காலமாக பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இத்திட்டம் உதவியாக அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


 லாப் கேஸ் விலை குறைப்பு
 01.09.2010 - புதன்கிழமை

12.5 கிலோ கிராம் நிறை கொண்ட லாவ் கேஸ் (சமையல் எரிவாயு) சிலிண்டர் ஒன்றின் விலை நேற்று நள்ளிரவு முதல் 46 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விலை 1593 ரூபாவாகும். எனினும் ஷெல் காஸ் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்பட வில்லை. 12.5 கிலோ கிராம் நிறை கொண்ட ஷெல் கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை 1652 ரூபாவாகும்.


 10 நெல் களஞ்சியசாலைகளை உலக உணவு அமைப்பு வழங்கியது
 01.09.2010 - புதன்கிழமை

கொள்வனவு செய்யும் நெல்லை களஞ்சியப்படுத்த சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான 10 களஞ்சியசாலைகளை உலக உணவு அமைப்பு இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வேண்டுகோளின் பேரிலேயே மேற்படி களஞ்சியசாலைகள் கிடைத்துள்ளன.

இத்தகைய பெறுமதிமிக்க களஞ்சிய சாலைகள் இலங்கைக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

அதிக நெல் அறுவடை கிடைக்கும் அம்பாறை அக்கரைப்பற்று, பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களில் இந்த களஞ்சியசாலைகள் அமையவுள்ளன. இந்த களஞ்சியசாலைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான கிலோ நெல்லை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தி வைக்க முடியும்.

பாகங்களாக இலங்கைக்கு கொண்டு வரப்படும் இந்த களஞ்சிய சாலைகளை தேவையான இடங்களில் அமைத்துக் கொள்ள முடியும். இவ்வாறான மேலும் சில களஞ்சியசாலைகளை தந்துதவுமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இந்தியாவிடமும் கேட்டுள்ளார்.


 சுதந்திரக் கட்சியின் 59 வது மாநாடு நாளை அலரிமாளிகையில்
 01.09.2010 - புதன்கிழமை
 
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 59 ஆவது மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாளை (2) அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1951 செப்டம்பர் 2 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. கடந்த 59 வருடங்களில் 4 பேர் கட்சிக்கு சிறந்த தலைமைத்துவம் அளித்தனர். கட்சியின் 59 வருட வரலாற்றில் இம்முறை அதிகூடுதலான உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 வட பகுதி மக்கள் தென் பகுதிக்கு சுற்றுலா
 01.09.2010 - புதன்கிழமை

தென் பகுதியிலிருந்து வட பகுதிக்கு மக்கள் தற்போது சுற்றுலாப் பயணம் மேற்கொள்வது போல் வட பகுதியைச் சேர்ந்தோரும் தென் பகுதிக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

வட பகுதியைச் சேர்ந்த பல பாடசாலைகளின் மாணவ மாணவிகள் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டு கொழும்பு உட்பட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவை மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுலா செல்லும் மாணவர்கள் பாராளுமன்றம் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் விகாரமகாதேவி பூங்கா உட்பட பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்க்கின்றனர்.


 மஸ்கெலியா தோட்டமொன்றில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது!
 01.09.2010 - புதன்கிழமை

நுவரெலியா மாவட்;டம் மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் தேயிலைச் செடிகளுக்கிடையில் கிடந்த ஆணொருவரின் சடலத்தினைப் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கேற்ப மஸ்கெலியா பொலிஸார் மீட்டுள்ளனர்.

நோட்டன் - மஸ்கெலியா பிரதான பாதையில் ஹபுகஸ்தென்ன தெபர்ட்டன் தோட்டத்துக்கு அருகில் பிரதான பாதையிலிருந்து 5 மீற்றர் தூரமுள்ள தேயிலைச் செடிகளுக்கிடையில் கிடந்த சடலமொன்றினையே பொலிஸார் மீட்டுள்ளனர்.

சுமார் 48 வயது மதிக்கப்பட்ட இந்த ஆணின் சடலத்துக்கு உரியவர் திவுலாபிட்டிய என்ற இடத்தைச்சேர்ந்தவர் என்றும் இவர் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.