Home English Tamil
     
   
 
 தமிழ் மக்கள் அபிவிருத்தியில் ஒன்றிணைவதன் மூலமே அழிந்து போன வாழ்வை கட்டியெழுப்ப முடியும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
 18.05.2013 - சனிக்கிழமை

தமிழ் மக்கள் அபிவிருத்தியில் ஒன்றிணைவதன் மூலமே அழிந்து போன வாழ்வையும் பிரதேசத்தையும் கட்டியெழுப்ப முடியும் அதுவே மக்களின் தேவையாகவும் உள்ளது என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவிலுள்ள விவேகானந்தநகர் கிராமத்திற்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 14 மில்லியன் ரூபா செலவில் மின்சாரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,  மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் மீள்குடியேறும்போது பற்றைக்காடுகளும், இடிந்த கட்டட குவியலுமாக எதுவுமே இல்லாத நிலையிலேயே கிளிநொச்சியில் மீள்குடியேற்றம் இடம்பெற்றது ஆனால் இந்த மூன்றரை ஆண்டுகளில் இந்த மாவட்ட அபிவிருத்தியில் பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது எவரும் எதிர்பார்க்காத அளவுக்கு இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது இதற்கு காரணம் இந்த மாவட்டமும், மக்களும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டமையே

எனவே ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றத்தில் இருந்து மேலும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் அதற்காக நாம் அனைவரும் அபிவிருத்தி தொடர்பில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் யுத்தத்தினால் அழிந்து போன வாழ்வை கட்டியெழுப்ப தமிழ் மக்களுக்கு இதனை தவிர வேறு மார்க்கம் கிடையாது எனத்தெரிவித்த அவர் எமது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வளமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கவேண்டியதும் எங்கள் அனைவரினதும் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், என்றுமே மின்சாரம் இல்லாத விவேகானந்த கிராமத்திற்கு இன்று மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது அது போன்று மின்சாரம் கிடைக்காத ஏனையபகுதிகளுக்கும் மின்சாரம் விரைவாக வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பாக விவேகானந்தா கிராமம் நகர குடிநீர் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது அத்துடன் கிராமத்தின் 9. 5 கிலோ மீற்றர் உள்ளக வீதிகள் புனரமைக்கவும் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது இது போன்று ஏனைய தேவைகள் தொடர்பிலும் தீர்வுகளை காண நாம் படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம் எப்பொழுதும் மக்களின் மகிழ்ச்சியான முன்னேற்றகரமான வாழ்க்கையே எங்களின் விருப்பமும் அதனை நோக்கியே செயற்பட்டும் வருகின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் கனகலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  இலங்கை மின்சார சபையின் வடக்கின் வசந்தம் திட்ட முகாமையாளர் குணசீலன்,கரைச்சி பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள் கிருஸ்ணசாமி,இராமச்சந்திரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தவநாதன் கிளிநொச்சி மாவட்ட மின்சார சபையின் வடக்கின் வசந்த மின் அத்தியட்சர் சமிந்த,மற்றும் அமலடயஸ்,கிராம சேவையாளர் வைரவநாதன்,கிளிநொச்சி மாவட்ட மின்சார சபையின் மின் அத்தியட்சகர் குகராஜ்,கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவுச் சங்கங்களின் பொது முகாமையாளர் துரைராஜா  மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.













 காணிஉரிமங்கள் இல்லாததால் மக்கள் நிரந்தர வீடுகளை பெறமுடியாதுள்ளனர் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்
 18.05.2013 - சனிக்கிழமை

கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் வாழுகின்ற மக்களில் பெருமளவானவர்கள் நிரந்தர வீட்டுத்திட்டத்திற்குள் உள்வாங்கப்படாத நிலை காணப்படுகின்றது இதற்கு முக்கியகாரணமாக அமைவது அவர்கள் எதிர்கொண்டுவரும் காணி உரிமம் தொடர்பான பிரச்சினையே என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி புன்னைநீராவி நாதன் குடியிருப்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது மக்களுடன் கலந்துரையாடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அங்குஅவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்த பாதிப்பை எதிர்கொண்ட அனைத்து மக்களின் வாழ்வியலும் மேம்படுத்தப்படவேண்டும் என்பதே எமது இலக்கு அதற்கமைவாகவே நடைபெற்றுவரும் அபிவிருத்திட்டங்களின் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் மக்களின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றாக அமைந்திருக்கும் வீட்டுத்தேவையை பூர்த்திசெய்வதும் முக்கிய செயற்பாடாகும் ஆனால் கண்டாவளைப் பிரதேசத்தில் உள்ள பல  கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நிரந்தரவீட்டுத்திட்டத்தை பெறமுடியாதுள்ளனர்  இதற்கு அவர்கள் எதிர்கொண்டுவரும் காணிஉரிமம் தொடர்பான பிரச்சினைகளே காரணமாக அமைந்துள்ளன.

இவ்வாறு மக்கள் எதிர்கொள்ளவுள்ள பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்த நிலையிலேயே நாம் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் காணிஉரிமம் தொடர்பான பிரச்சினைக்கு திர்வு காண முயற்சித்து வருகின்றோம் ஆனால் அன்று ஆரம்பிக்கப்பட்ட செயற்பாடுகள் சிலரால் திட்டமிட்டு முடக்கப்பட்டன இதன் விளைவாகவே இன்று மக்கள் இருப்பிடங்களின்றி மழை வெயில் உள்ளிட்ட இயற்கை பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர். இருப்பினும் குறித்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வுகாணப்பட்டு மக்களுக்கு நிரந்தர வீடுகளையும் வழங்குவதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம். அதற்கான செயற்பாடுகள் நாதன்திட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்,

நாதன் திட்ட கிராமத்தில் உள்ள 2கிலோமீற்றர் முதன்மைவீதியை புனரமைப்பதற்கும் மற்றும் 3 கிலோமீற்றர் விவசாய வீதிகளை புனரமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை கல்லாறு தொடக்கம் பிரமந்தனாறுவரை செல்லும் 7 கிலோமீற்றர் நீளமான வீதியைசுமார் 300 இலட்சம் வரையான நிதியொதுக்கீட்டின்மூலம் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு இப்பகுதியில் அமைந்துள்ள தண்ணிப்பன்னா குளமும் புனரமைக்கப்படவுள்ளது. இதேவேளை  வரும் மூன்று மாத காலத்திற்குள்  இப்பகுதிக்கு மின்விநியோகத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும்; எனவும் குறிப்பிட்டார்.

மேலும் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நாதன்குடியிருப்பு புலேந்திரன் முன்பள்ளிக்கு கற்றல் உபகரணங்களை  பெற்றுக்கொடுப்பதற்கும் நிதிஒதுக்கீடுகளை மேற்கொண்ட அவர். அப்பகுதியில் அமைந்துள்ள பாவனையற்ற வாணிப நிலையக் கட்டடத்தினை மாதர்கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும் குறித்த பகுதிக்கு சீரான தபால் விநியோகத்தினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் பாராளுமன்றஉறுப்பினர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை மக்களின் குடிநீர்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் மேலுமொரு பொதுக்கினற்றினை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்ட அவர் பிரமந்தனாறு கல்லாறு புன்னைநீராவி  நாதன்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு கிராமமட்ட குடிநீர் விநியோகத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு மக்களால் கோரப்பட்ட மேலும் பலதேவைகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாதன்திட்ட கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் வரதனின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கண்டாவளைப்பிரதேச செயலர் முகுந்தன், அப்பகுதி கிராமசேவையாளர் நாகேந்திரம் கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தயாரூபன் கிராம அலுவலர் நாகேந்திரன் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கண்டாவளை பிரதேச இணைப்பாளர் செல்வம், போதகர் ஜெயபாலன் பிரதேச பெரும்பாக உத்தியோகத்தர் மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்









 டான் யாழ் ஒளி தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மன்ற நிகழ்வில் ஈ.பி.டி.பி சர்வதேச பிராந்தியங்களின் முக்கியஸ்தர் விந்தன்
 18.05.2013 - சனிக்கிழமை

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச பிராந்தியங்களின் முக்கியஸ்தர் விந்தன் அவர்கள் இன்றைய தினம் (18) டான் யாழ் ஒளி தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மன்ற நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

இன்றைய தினம் இரவு 10.00 மணிக்கு ஆரம்பமாகும் இந் நேரடி ஒலிபரப்பில்  பொதுமக்கள் அனைவரும் அரசியல் தொடர்பிலான சந்தேகங்களை தொலைபேசியூடாக கேட்கலாம்.


 வீழ்ச்சி நிலையிலுள்ள பாடசாலைகளின் பௌதீக வளங்கள் மேம்படுத்தப்படும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமல்
 18.05.2013 - சனிக்கிழமை

மாணவர்களின் கல்வித் தரத்தினை மேம்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன்(கமல்) அவர்கள் தெரிவித்துள்ளார்.

அல்வாய் சிறிலங்கா வித்தியாலயத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் அதிபர் இந்திரலிங்கம் தலைமையில் நேற்றையதினம்(17) நடைபெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மாவட்ட அமைப்பாளர் கல்விச் சமூகத்தினரிடம் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தது கொண்டதுடன், அவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மாணவர்களின் கல்வித் தரத்தினை முன்னேற்றுவதற்கான ஆக்கபூர்வமான பணிகளை கல்விச் சமூகத்தினரே முன்னெடுக்க வேண்டும். கஷ்டப் பிரதேச பாடசாலைகள் எனக் கூறிக்கொண்டு எமது மாணவர்களின் முன்னேற்றத்தை மழுங்கடிப்பதை கைவிட்டு இருக்கின்ற வளங்களை சரியான முறையில் கையாண்டு பாடசாலையின் வளர்ச்சிக்காக பாடுபட வேணடும்.

மாணவர்கள் பாடசாலை முடிந்ததும் வீடுகளிற்கு சென்று படித்தவற்றை மீட்டல் செய்யவேண்டும். இதற்கு பெற்றோர்களே மாணவர்களின் கல்வியில் கூடுதல் அக்கறை உடையவர்களாக செயற்பட வேண்டும்.

கடந்த காலங்களில் எமது தமிழ் பேசும் சமூகத்தை சார்ந்த கல்விமான்கள் புத்திஜீவிகள் அடிப்படை வசதிகள் கூட அற்ற கிராமப்புற பாடசாலைகளில் கல்விகற்றே தமது கடுமையான உழைப்பினால் உயர் நிலையை அடைந்துள்ளனர். இதனால்தான் தலைநகர் கொழும்பில் தமிழ் தலைவர்களின் சிலைகள் நிமிர்ந்து நிற்கின்றன.

மாணவர்கள் கல்வியில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியவர்களாக உள்ளனர். நாம் வெறுமனே குறைகளை மட்டும் கூறிக்கொண்டிருப்பதை கைவிட்டு குறைகளை நிறைகளாக மாற்றி மாற்றத்தை நோக்கி ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

மாணவர்களை கல்வித்தரத்தில் மேம்படுத்தம் வகையில் அவர்களை ஆரம்ப வகுப்புக்களில் இருந்தே சரியான முறையில் கட்டியெழுப்ப வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலன்கருதி சிந்தித்து செயற்பட வேண்டியவர்களாய் உள்ளோம்.

இப்பாடசாலையை தொடர்ந்து வீழ்ச்சி நிலையில் விட்டுவிட முடியாது. மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அதனை எம்மால் மட்டுமே செய்ய முடியும். இப்பாடசாலைக்கு எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஒரு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் அதேவேளை மலசல கூடங்கள் அமைப்பதற்கான நிதியொதுக்கீடு செய்வதற்கான ஒழுங்குகள் உடனடியாக மேற்கொள்ளப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

முன்பதாக பாடசாலையின் பல்வேறு தேவைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன், பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இக்கலந்துரையாடலில், ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், வடமாகாண கல்வி அபிவிருத்திக் குழுவின் தலைவர் செல்வவடிவேல் மற்றும் கல்விச் சமூகத்தினர் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.









 வடக்கு கிழக்கு மக்களின் இதயம் எனக்குத் தெரியும் - ஜனாதிபதி
 18.05.2013 - சனிக்கிழமை

வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலொன்றில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச் செய்தவர்கள். அங்குள்ள மக்களின் இதயத்தைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மீட்டெடுக்கப்பட்ட தாய்நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் அபகரிப்பதற்கோ இன்றேல் நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் நான் இடமளிக்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து நடைபெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,  இலங்கை வரலாற்றில் தாய்நாடு ஒன்றிணைக்கப்பட்ட சிரேஷ்டத்துவமான சந்தர்ப்பமாகும். அதுமட்டுமன்றி மரணபயம் நீக்கப்பட்டு சுதந்திரமாக பயணிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்த சிரேஷ்டத்துவமான சந்தர்ப்பமாகும். அவற்குக்கப்பால் மனித கேடயங்களாக தடுத்துவைக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களை மீட்டெடுத்த சிரேஷ்டத்துவமான சந்தர்ப்பமாகும்.

தாய்நாட்டை மீட்டெடுப்பதற்காக இலட்சக்கணக்கானோர் பலியானார்கள், கண்,காது, அவயவங்களை இழந்தனர். இரத்தம் மற்றும் வியர்வையை பூமிக்கு பூஜை செய்தனர் என்றும் அவர் சொன்னார்.

அவ்வாறான சிரேஷ்டத்துவமிக்க படையினரை சிலர் சர்வதேச தூக்கு மேடைக்கு கொண்டுச்செல்வதற்கு முயற்சித்தனர். இன்னும் சிலரோ படையினருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தேவையான நலன்புரி விடயங்களை செய்துவருகின்றனர்.

எதிர்காலத்திலும் நம்பிக்கையுடன் நாட்டுக்கு சேவையாற்றுவோம் என்ற மனநிலையை நாம் வருகின்றோம். அதற்கான சேவைகளையே நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

ஒரு காலத்தில் காலி முகத்திடல் மூடப்பட்டிருந்தது. மத்தியவங்கி கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டது. அதற்கு அருகிலிருக்கின்ற ஜனாதிபதி மாளிகைக்கும் குண்டு லொறி அனுப்பப்பட்டது. அவற்று அருகிலிருக்கின்ற ஹோட்டல்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அனுராதபுரம் மகாபோதி விஹாரையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 1990 களில் காத்தான்குடியில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மாத்தறையில் நடத்தப்பட்ட முஸ்லிம் பேரணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அமைச்சர் இன்னும் சுகமடையாத நிலையில் இருகின்றார்.

நாட்டில் பல இடங்கள் மற்றும் சந்திகள் புலிகளினால் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சந்திகளாவும் இடங்களாகவுமே அடையாளம் காணப்பட்டன. அவ்வீதியாக இன்றேல் அந்த இடங்களை கடந்து செல்கையில் இந்த இடத்தில் தான் ஜனாதிபதி பிரேமதஸா கொல்லப்பட்டார். இந்த சந்தியில் தான் பாரமி குலத்துங்க கொல்லப்பட்டார் என்று அடையாளப்படுத்துகின்றனர். என்னிடம் சில இடங்களை அடையாளப்படுத்தினர்.

நாட்டில் எங்கும் எவ்விடத்திற்கும் சென்று எதனையும் செய்யும் வகையில் புலிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட காலமொன்றும் இதயத்தில் மரணபயமிருந்த நாடாகவும் இந்நாடு இருந்தது. மக்களை மீட்டெடுப்பதற்கு யாருமே முன்வரவில்லை.

மக்கள் தாக்கப்பட்டபோது  5ஃ6 அதிகாரத்துடன் இருந்த ஜனாதிபதி மக்களே தங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று கூறிவிட்டார். புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்துதவிய ஜனாதிபதி புலிகளினாலேயே கொல்லப்பட்டார். புலிகளின் குண்டுத்துளைக்காத ஆடையை வழங்கி சமாதானத்திற்கு அழைத்துவந்த இந்திய பிரதமரையும் புலிகள் இந்தியாவில் வைத்தே கொலைச்செய்தனர்.

புலிகளுடன் மோதவேண்டாம் அவர்கள் கேட்பதைகொடுக்குமாறு சர்வதேசம் எங்களிடம் அடிக்கொருதடவை கேட்டது. எனினும், நாம் இளைஞர்களின் சக்தி மற்றும் வீரத்தில் நம்பிக்கைக்கொண்டோம்;. பயத்தை இல்லாது செய்து நம்பிக்கையூட்டினோம்.

அவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி சிறுபிள்ளைகளின் இதயங்களுக்கே நன்றாக புரிகின்றது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக நாட்டை பிரித்து கொடுக்கவும் முயற்சித்தனர். அவ்வாறானவர்களே குளங்களை கட்டிய மன்னனான மஹாசேனனின் பெயரை புயலுக்கு சூட்டுமாறு 2003 ஆம் ஆண்டு பரிந்துரை செய்தனர்.

யுத்தம் செய்த யுகமாக அல்ல, டயர்கள் போட்டப்பட யுகமாக அல்ல, யுத்தம் நிறைவடைந்த, இரத்த கங்கை நிறுத்தப்பட்ட யுகம் மற்றும் நாட்டை முன்னோக்கிய யுகமாக மாற்றவேண்டும்.

வடமாகாணத்தை பொறுத்தவரையில் 12 கட்சிகள் தங்களுடைய அரசியல் செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுக்கின்றனர். பயந்துக்கொண்டு கொழும்பிலிருந்து அன்று அரசியல் செய்தவர்கள் இன்று எவ்விதமான அச்சமும் இன்றி அரசியல் செய்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

வடக்கு கலாசாரத்தை நாசப்படுத்துவதற்கு பிரபாகரனும் புலம் பெயர்ந்தவர்களும் முயற்சித்தனர். மனித கேடயங்களாக தடுத்துவைக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்தபோது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. புலம்பெயர்ந்தவர்களும் முன்வரவில்லை அவர்களுக்கு இராணுவமும் அரசாங்கமுமே உணவுக்கொடுத்தது.

தூக்குமேடை வரை செல்லவேண்டியவர்களுக்கு நாம் மன்னிப்புக்கொடுத்தோம். பலர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர். வேறு நாடுகளில் இவ்வாறான நடைமுறை இல்லை என்றும் அவர் கூறினார்.

சிவில் படைக்கு தமிழர்கள் 4000 பேரை இணைத்துள்ளோம். முப்படைகளிலும் இணைவதற்கு வரிசைகளில் நிற்கின்றனர். படைகளில் தமிழர்கள் இணைவதை தெற்கில் உள்ளவர்கள் எதிர்க்கவில்லை வடக்கில் உள்ள சிலரும் புலம்பெயர்ந்தவர்களுமே எதிர்த்தனர். அதனால் தான் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டுவரப்பட்டபோது கிளிநொச்சியில் அந்த பிரேரணைக்கு எதிராக மக்கள் அணித்திரண்டு எதிர்ப்பு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு கிழக்கு மக்களின் இதயங்களை நான் நன்கறிவேன். ஒருத்தேர்தலில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தனர்.

காலத்திற்கு காலம் புரட்சி,ஊடகசுந்திரம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் குரல்கொடுப்பர் அதகெல்லாம் நான்கு மாதங்களுக்கு ஒருதடவை நாங்கள் பதிலளித்து கொண்டிருக்கின்றோம் என்பதுடன் ஒரு அங்குலத்தையேனும் பறிப்பதற்கோ இன்றேல் நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் இடமளியேன் என்றும் அவ் மேலும் தெரிவித்தார்.


 யுத்த வெற்றி விழா
 18.05.2013 - சனிக்கிழமை

யுத்த வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகின்றன.

யுத்த வெற்றி அணிவகுப்பின் பிரதான வைபவம் இன்று காலை கொழும்பு காலி முகத்திடலிலும், தேசிய படை வீரர்கள் நினைவு தின பிரதான வைபவம் இன்று மாலை 4.00 மணிக்கு பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன.


 கறுப்பு தேயிலை உற்பத்தியில் இலங்கைக்கு இரண்டாம் இடம்
 18.05.2013 - சனிக்கிழமை

இந்த வருடத்தின் ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான முதல் காலாண்டில் சர்வதேச அளவில் கறுப்பு தேயிலை உற்பத்தி, 18.18 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்பு தேயிலை உற்பத்தி கடந்த வருடத்தின் இதே காலாண்டில், 26.48 கோடி கிலோவாக இருந்த நிலையில் இவ்வருட முதல் காலாண்டில் 31.48 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது.

இந்த காலாண்டில் கென்யாவின் கறுப்பு தேயிலை உற்பத்தி, 4.48 கோடி கிலோவிலிருந்து, 11.73 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, கறுப்பு தேயிலை உற்பத்தியில், கென்யா முதலிடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து, இலங்கை, 8.02 கோடி கிலோ கறுப்பு தேயிலை உற்பத்தி செய்து, இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவின் கறுப்பு தேயிலை உற்பத்தி, 49.30 லட்சம் கிலோ அதிகரித்து, 7.92 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. உலகளவில், இந்தோனேஷியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளை தவிர்த்து, ஏனைய நாடுகளில், கறுப்பு தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.

மாலத்தீவு நாட்டில், கறுப்பு தேயிலை உற்பத்தி, 36 லட்சம் கிலோ சரிவடைந்து, 1.77 கோடி கிலோவாகவும், இந்தோனேஷியாவில் இதன் உற்பத்தி, 20 லட்சம் கிலோ குறைந்து, 1.37 கோடி கிலோவாகவும் சரிவடைந்து உள்ளது.


 காட்டு யானை தாக்கியதில் 60 வயதான முதியவர் பலி
 18.05.2013 - சனிக்கிழமை

சாலியவௌ, சிரிசரவத்தை இஹல புளியங்குளம் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் இஹல புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சாலியவௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் 21ம் திகதி மீள ஆரம்பம்
 18.05.2013 - சனிக்கிழமை

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் எதிர்வரும் 21ம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

டுபாயில் இருந்து மசகெண்ணை கொண்டுவரும் கப்பம் எதிர்வரும் 20ம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் தொடரும் என அவர் குறிப்பிட்டார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 16ம் திகதி தொடக்கம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எதிர்பாராதவிதமாக மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதனால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கூட்டுத்தாபனத்தின் இந்த செயற்பாட்டால் நாட்டில் எரிபொருள் சிக்கல் நிலை ஏற்படும் என எரிபொருள் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதனால் எரிபொருட்களின் விலை உயர்வடையக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், நாட்டில் போதியளவு எரிபொருட்கள் கையிருப்பில் இருப்பதாக எரிபொருள் கூட்டுத்தாபனம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.


 பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அபராதம்
 18.05.2013 - சனிக்கிழமை

பயணிகளுக்கு இடைஞ்சலாக பஸ்களில் அதிக சத்தத்துடன் வானொலியை ஒலிக்க வைக்கும் பஸ் உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் அறவிட தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இது தவிர ஆபாசத்தை வெளிப்படுத்தும் வகையிலான வீடியோக்களைக் காண்பிக்கும் பஸ் சாரதியிடம் இருந்து அபராதம் அறவிட உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் ரொசான் குணவர்த்தன தெரிவித்தார்.

பஸ்களில் பயணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்படுவது குறித்தும் ஆபாசத்தை வெளிப்படுத்தும் வகையிலான வீடியோக்களை ஒளிபரப்புவது குறித்தும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்பொழுதுள்ள சட்டவிதிகளின்படி, இதற்கு எதிராக செயற்பட முடியாமுள்ளதால் புதிதாக சட்ட ஒழுங்குகளை அறிமுகப்படுத்த அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இவ்வாறு பயணிகளுக்கு இடைஞ்சலாக செயற்படும் பஸ்களுக்கு எதிராக கடுமையான தண்டங்கள் அறவிட திட்டமிடப்பட்டுள்ளதோடு விரைவில் அபராத தொகைகள் குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார். மக்களுக்கு சொகுசாக பயணம் செய்யக்கூடியவாறு பஸ் சேவைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சொகுசு பஸ் சேவை தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் அதற்கு தீர்வு அளிப்பது குறித்தும் ஆராயும் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


 வடமாகாணத்தின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சி திருப்திகரமானதாக இல்லை - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
 17.05.2013 - வெள்ளிக்கிழமை

வடமாகாணத்தின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியானது திருப்திகரமானதாக இல்லை இது முன்னோக்கிச் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையேயான 2013 விளையாட்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது பிரதேசங்களின் விளையாட்டுத்துறையினை வளர்ச்சி நோக்கி கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது அதற்காக நாம் எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும். ஒரு குறிப்பிட்டளவு இளைஞர், யுவதிகளே விளையாட்டுக்களில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அத்தோடு ஒருசில விளையாட்டுக்களிலேயே எமது பிரதேசம் அதிக கவனம் செலுத்தியும் வருகிறது. இந்த நிலைமை மாற வேண்டும்.

பெருவிளையாட்டுகளில் காட்டுகின்ற ஆர்வம் தடகள விளையாட்டுக்களிலும் இளைஞர், யுவதிகள் காட்ட வேண்டும். முக்கியமாக எமக்கே சொந்தமான பாரம்பரிய பண்பாட்டு விளையாட்டுக்களை மறந்து போகும் சமூகமாகவும் நாம் மாறிக் கொண்டிருக்கின்றோம். இது மாற்றம் பெற வேண்டும். நாம் எமது பாரம்பரிய பண்பாட்டு விளையாட்டுகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

அரசு அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானங்களை ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் ஒரு விளையாட்டு மைதானதம் வீதம் அமைக்கவுள்ளது. எனவே இந்த வசதி வாய்ப்புக்களையும் பயன்படுத்தி எமது இளைஞர், யுவதிகள் விளையாட்டுத்துறையிலும் மிளிர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு தொடர்ந்தும் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக தம்மாலான எல்லா பங்களிப்புக்களையும் வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

2013 உடுவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் இனுவில் இந்து விளையாட்டுக்கழகம் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டது.

வெற்றி பெற்ற கழகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் வெற்றிக் கேடயங்களையும் வழங்கி வைத்தார்.

உடுவில் பிரதேச செயலர் நந்தகோபாலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், உடுவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் திருமதி செல்வக்குமாரி, உடுவில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரன், வலிதெற்கு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான அரிகரன், இராஜசேகரம், யாழ்.மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் மோகனதாஸ், சுன்னாகம் மக்கள் வங்கியின் முகாமையாளர் பார்த்தீபன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சுன்னாகம் பிரதேச உதவி இணைப்பாளர் வலன்டயன், கிராமசேவையாளர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

















 பாடசாலைகளுக்கான  பௌதீக வளத்தேவைகள் பூர்த்தி செய்யப்படும் - ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் உதயன்
 17.05.2013 - வெள்ளிக்கிழமை

மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் பாடசாலைகளுக்கான  பௌதீக வளத்தேவைகள் பூர்த்தி செய்யப்படும்  என ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் அவர்கள் தெரிவித்தார்.

இன்றைய தினம்; (17) யாஃசந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலத்தில்  மகிந்த சிந்தனைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத்தொகுதியையும் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் பாடசாலை பௌதீக வளங்களை நாம் பூர்த்தி செய்து வருகின்ற அதேவேளை கிடைக்கப்பெறுகின்ற வளங்களை சரியான வகையில் பயன்படுத்தி மாணவர்களின் கல்வியினை உயர் நிலைக்கு இட்டுச்செல்கின்ற தார்மீக கடமை பெற்றோர், ஆசிரியர்களையே சாரும்.

இதேவேளை குடும்ப வறுமை மாணவர்களின் கல்வியினை எவ்வகையிலும் பாதிப்படையாத வண்ணம் செயற்படவேண்டும். வறிய நிலையிலுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக பல்வேறு சமுகநலத்திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகின்றோம்

இதனடிப்படையில் சமுர்த்தி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதாந்த உதவுதொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே இவ்வாறான உதவுதொகைகள் மற்றும் கல்விச்செயற்பாடுகளிற்கான உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை சரியாகப் பயன்படுத்துவதனூடாக கல்வியினை; வளர்த்தெடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தென்மராட்சிக்கல்விப்பணிப்பாளர் சு.கிருஸ்ணகுமார் மற்றும் தென்மராட்சி ஈபிடிபி அமைப்பாளர் அலெக்சாண்டர் சாள்ஸ் அயற்பாடசாலை அதிபர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பெற்றோர்கள் ஆகியோகள் கலந்து கொண்டார்.


 வட்டுதெற்கு பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீர் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஏற்பாடு
 17.05.2013 - வெள்ளிக்கிழமை

வட்டுதெற்கு பகுதியில் வழங்கப்படும் குடிநீரின் தன்மை குறித்து விசேட ஆய்வுக் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களின் ஏற்பாட்டில் துறைசார்ந்த அதிகாரிகளை உள்ளடக்கி மேற்கொள்ளபட்ட ஆய்வில் அப்பகுதிக்கு சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வட்டுதெற்கு முதலி கோவிலடிப் பகுதியில் வேல்ட்விசன் நிறுவனத்தின் நிதியுதவியுடன் வலிமேற்கு பிரதேச சபையினரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் குழாய் வழி குடிநீர் விநியோகத்தின் மூலம் வழங்கப்படும். குடிநீர் உவர்தன்மையுடையதெனவும் அந்நீரை குடிப்பதற்கு பயன்படுத்துவதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்ற வகையிலும் இவ்விடயம் அப்பகுதி மக்களால் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தொடர்புடைய அரச அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் பிரதேச சபையினர் ஆகியோரை ஒன்றிணைத்து பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் விசேட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் உடனடி பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டது.

முடிவில் இன்றைய பரிசோதனைக்கமைவாக நீர்குடிநீருக்கேற்ற தன்மையை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் காலநிலை மாற்றத்திற்கேற்ப நீரின் தன்மைகள் மாற்றமடையும் என்ற யதார்த்தத்தின் அடிப்படையில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் தொடர்ச்சியாக பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு விநியோகிக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களால் ஆலோசனை வழங்கப்பட்டது.

அத்தோடு  குழாய் வழி குடிநீர் விநியோகத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது மாவட்டத்தின் பொதுவான நீர் விநியோகக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் அதுசார்ந்த ஆய்வுகள் உரியமுறைப்படி மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

வேள்ட்விசன் நிறுவனத்தின் சுமார் 9.5 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் இத்திட்டம் சுமார் 800 பயனாளிகளின் குடிநீர் பாவனையை இலக்காகக் கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் மீள்குடியேற்றப்பட்ட பொன்னாலை காட்டுப்புலம் ஆகிய பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தினையும் பிரதேச சபையினர் சீராக வழங்க வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் பணிக்கப்பட்டது. அத்தோடு குறித்த பகுதிகளிலும் நிரந்தர குடிநீர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பிரதேச சபைக்கு சொந்தமான குடிநீர் கிணற்றினை சபையின் ஆளுகைக்கு கொண்டு வர சபை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

வலிமேற்கு சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் வலிமேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் சிவகுரு பாலிகிருஸ்ணன் (ஜீவன்) மற்றும் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் செல்வகுமார், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் யாழ்.மாவட்ட பொறுப்பதிகாரி தபேந்திரன், வலிமேற்கு பிரதேச சபையின் செயலாளர் சாந்தா, சங்கானை பிரதேச செயலக பிரதிதிட்டப் பணிப்பாளர் சிவகுமார், வேல்ட் விசன் நிறுவனத்தின் யாழ்.மாவட்ட முகாமையாளர் றொசாய்றோ, சுகாதார சேவைகள் அதிகாரி நந்தகுமார் ஆகியோரும் வட்டுதெற்கு பிரதேசத்தின் மக்களும் கலந்து கொண்டனர்.











 வடமராட்சியில் மக்களின் தேவைகள் தொடர்பான பகுப்பாய்வு கலந்துரையாடல்
 17.05.2013 - வெள்ளிக்கிழமை

வடமராட்சி பைங்கூரன் கிராம மக்களின் தேவைகள் தொடர்பிலான பகுப்பாய்வுக் கலந்துரையாடலொன்று ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், வடமராட்சி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நீதிதேவி சனசமுகநிலையத்தில் நேற்றை தினம்  நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலின் போது வீதி திருத்தம், வீட்டுத்திட்டம், மலசலகூடங்களின் தேவைகள், வாழ்வாதாரம் உட்பட மக்களின் அடிப்படை பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.  

இந்நிகழ்வில் கரவெட்டிப் பிரதேச செயலர் சிவசிறீ, ஈ.பி.டி.பியின் கரவெட்டி பிரதேச இணைப்பாளர் செந்தில்நாதன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.









 முதலீட்டை ஊக்குவித்து பலப்படுத்த 3 புதிய நிலையங்கள்
 17.05.2013 - வெள்ளிக்கிழமை

முதலீட்டை ஊக்குவித்து பலப்படுத்த புதிய வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 3 நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதையடுத்து முதலீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது பல்வேறு முதலீடுகளுக்காக முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கு பெரும் எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

தாய்வான், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வத்துடன் காணப்படுகின்றனர். அவர்கள் தமது விண்ணப்பங்களை முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கையின் தைத்த ஆடைகளுக்கு சர்வதேச நாடுகளில் கூடுதலான கேள்வி ஏற்பட்டுள்ளது. எனினும் ஆடைத் தொழிற்சாலைகள் ஊழியர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இளைஞர், யுவதிகள் வெளி நாட்டு தொழில்வாய்ப்புகளுக்காக செல்வதே இதன் காரணமென முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.


 2011ம் ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் 4வது தடவையாகவும் வாய்ப்பு
 17.05.2013 - வெள்ளிக்கிழமை

2011ம் ஆண்டு மூன்றாவது முறையாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு, நான்காவது வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர்கள் நான்காவது தடவையும் மீண்டும் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்து, பல்கலைக்கழகத்துக்கு தெரிவாக முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ம் திகதி வரையில் இதற்கு விண்ணப்பிக்க முடியும். வழமையாக மூன்றாவது முறையுடன் விண்ணப்பதாரிகளின் பல்கலைக்கழக அனுமதிக்கான அவகாசம் நிறைவடையும்.

எனினும் 2011ம் ஆண்டு மூன்றாவது தடவையயாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு இந்த விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இடம்பெற்ற பெறுபேறுகள் தொடர்பான குழப்பநிலையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி விண்ணப்பதாரிகள் தங்களின் விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து, பரீட்சைகள் திணைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக பிரிவிடம் கையளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.


 அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேர் கைது
 17.05.2013 - வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல முற்பட்ட 41 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம், முன்னேஸ்வரம் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 27 ஆண்களும் இரு பெண்களும் 5 சிறுவர்களும் 4 சிறுமிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் அனைத்து பால்மா வகைகளினதும் டி.சி.டி. சோதனை
 17.05.2013 - வெள்ளிக்கிழமை

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் நுகர்வுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பால்மா வகைகளிலும் டி.சி.டி. இரசாயன பதார்த்தம் குறித்த சோதனை முன்னெடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் டாக்டர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.

இதற்கென பால்மா வகைகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்ட மூன்று நாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டுக் குழு இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பால்மாக்களிலும் டி.சி.டி. தாக்கம் குறித்து சோதனை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்ததற்கமைய கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பணிப்புரையின் பேரில் மூன்று நாடுகளுக்கு இதன் மாதிரிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இதன்படி வெளிநாடுகளிலிருந்து பால்மா இறக்குமதி செய்யப்படும் அனைத்து நிறுவனங்களுக்கும் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் நேரில் சென்று அதன் மாதிரிகளை நேற்று முதல், சேகரிக்க ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் சிங்கப்பூரிலிருந்து ஏற்கனவே கிடைக்கப்பெற்ற மாதிரி இருக்கத்தக்கதாகவே மேலும் மூன்று நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பால்மாக்களினதும் மாதிரிகள் அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்
 17.05.2013 - வெள்ளிக்கிழமை

நாளை இடம்பெறவுள்ள இராணுவ வெற்றி விழா கொண்டாட்டங்கள் காரணமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊர்வலம் காரணமாக கொழும்பு நகரத்தில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படடுள்ளன.

காவல்துறை திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாளை அதிகாலை ஐந்துமணி தொடக்கம் இராணுவ கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலம் என்பன நிறைவடையும் வரையில், கொழும்புக்கு உள்நுழையும் சகல பாதைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மூடப்படும் பாதைகளுக்கு மாற்றீடாக மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு காவல்துறை திணைக்களம், பொதுமக்களை கோரியுள்ளது.


 ஜனாதிபதி நாடு திரும்பினார்!
 17.05.2013 - வெள்ளிக்கிழமை

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு உகண்டா சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ,தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று அதிகாலை நாடு திரும்பினார்.

தனது உகண்டா விஜயத்தின் போது  ஜனாதிபதி, 203 பொதுநலவாய உள்ளுராட்சி மன்றங்களின் மாநாடு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளிலும்  கலந்து கொண்டார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ், மேற்படி அமைச்சின் மேற்பார்வையாளரான பாராளுமன்ற உறுப்பினர் சஜித் வாஸ் குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் உகண்டா சென்றிருந்தனர்.


 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.