48 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக வாக்கெடுப்பு  நிலையத்தில் வாக்குகள் எண்ணப்படுகின்றது!

Saturday, February 10th, 2018

1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இம்முறையே முதற்தடவையாக வாக்கெடுப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

தபால்மூல வாக்குகள் 50 இற்கு மேற்பட்டதாக காணப்பட்டால் அவை பிறிதொரு நிலையத்திலும் அதன் எண்ணிக்கை 50 இற்கு குறைவாக இருந்தால் ஏனைய சாதாரண வாக்குகளுடன் இணைத்துக் கணக்கிடப்படும். வாக்கு எண்ணும் நிலையங்களுக்கமைய பெறுபேறுகள் வெளியிடப்பட்டு பின்னர் இறுதியாக அனைத்தும் சேர்த்து தொகுதியடிப்படையில் பெறுபேறுகள் வெளியிடப்படும்.

பின்னர் தொகுதியடிப்படையிலான பெறுபேறுகளை தெரிவத்தாட்சி அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து இரவு 10 மணியளவில் உள்ளூராட்சி சபை முடிவுகளை அறிவிப்பர் என்றும் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.மொஹமட் தெரிவித்தார்.நாடு முழுவதுமுள்ள 42 பொலிஸ் பிரிவுகளிலும் உள்ள 65 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகளும் நேற்று காலை 7 மணி முதல் தமது தேர்தல் கடமைகளை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் 11 ஆம் திகதி மாலை வரை தொடர்ந்தும் கடமையில் இருப்பரென்றும் அதனைத் தொடர்ந்தும் அவர்களது கடமை நீடிக்கப்படுவது தொடர்பில் பொலிஸ்மா அதிபரே தீர்மானிப்பாரென்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

அத்துடன் பொலிஸ் திணைக்களத்தால் மூவாயிரத்துக்கும் அதிகமான பொலிஸ் நடமாடும் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்கெடுப்பு நிலையத்துக்கு இரண்டு பொலிஸார் வீதம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

Related posts: