பொறுப்பை சகலரும் செவ்வனே செய்யுங்கள் – யாழ்ப்பாண பல்கலைப் பீடாதிபதி!
Thursday, March 8th, 2018
தமிழ் இனத்தின் இருப்பு, அடையாளம், பண்பாடு, கலாசாரம் என்பன பேணிப்பாதுகாக்கப்பட நாம் ஒவ்வொருவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும். 2009 ஆம் ஆண்டு போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதன் ஊடாக தற்போது இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஓர் அத்தியாயம் எழுதப்பட்டு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை ஒவ்வொருவரும் செவ்வனே செய்யவேண்டும். என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டப்படிப்புகள் பீட பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை சுற்றுலாத்துறை ஹோட்டல் முகாமைத்துவ கற்கைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2017, 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சுற்றுலா அபிவிருத்தி விருந்தோம்பல் கற்கை நெறியை 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழுமைப்படுத்தியிருந்தனர்.
அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அதில் உரையாற்றும்போது மிகுந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழ்மொழி, கலாசாரம், பண்பாடுகளை பாதுகாப்பதோடு மேலும் சிறப்பாகப் பேணுவதற்கேற்றதான நடவடிக்கையை ஒவ்வொருவரும் எடுக்கவேண்டும்.
இவற்றுடன் உணவு, உடை, பாரம்பரியம் தொடர்பிலும் அக்கறை கொள்ள வேண்டும். எமது உரிமைகளை இனிமேல் நாங்கள்தான் போராடிப் பெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் என்னவென்று ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்.
எத்தகைய பணிகளைச் செய்ய வேண்டும். அவற்றை எந்த முறையில் கொண்டு நடத்தவேண்டும் என்பன தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். போரின் பின்னர் இதற்கான தேவை தற்போது அதிகம் ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பண்பாடுகள், கலாசாரம், பாரம்பரியங்கள் பாழடைந்துபோக இடமளிக்கக் கூடாது என்றார்.
Related posts:
|
|
|


