9 பேர் டக்-அவுட் : அணியின் ஓட்டங்கள் 6 – கிரிக்கெற் வரலாற்றில் மோசமான சாதனை

Thursday, June 20th, 2019

சர்வதேச அங்கீகாரம் பெற்ற டி20 போட்டி ஒன்றில், மாலி அணி 6 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்து மிக மோசமான சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது.

ருவாண்டா மகளிர் கிரிக்கெட் அணிக்கும், மாலி மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான டி20 போட்டி கிகாலி நகரில் நடைபெற்றது. முதலில் ஆடிய மாலி அணி  9 ஓவர்களில் அனைத்து வீராங்கனைகளும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

குறிப்பாக, 9 வீராங்கனைகள் டக்-அவுட் ஆகினர். தொடக்க வீராங்கனை மரியம் சமாகே 6 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் எடுத்தார். மீதமுள்ள 5 ஓட்டங்கள் உதிரிகளாக வந்தவை. மேலும், ஒரு ஒரே வீராங்கனை மட்டும் 10 பந்துகளுக்கு மேல் மாலி அணியில் எதிர்கொண்டார்.

ருவாண்டா அணி தரப்பில் பந்துவீசிய 4 வீராங்கனைகளுமே விக்கெட் வீழ்த்தினர். பின்னர் ஆடிய ருவாண்டா அணி 4 பந்துகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஐ.சி.சியின் சமீபத்திய விதிகளின்படி உறுப்பு நாடுகள் இடையிலான டி20 போட்டிக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்கலாம்.

எனவே, இந்தப் போட்டியில் மாலி அணி 6 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது, சர்வதேச டி20 வரலாற்றில் மிகவும் குறைந்த ஸ்கோராகப் பதிவானது. அதேபோல் அதிக பந்துகள் மீதமிருக்கும் நிலையில், வென்ற அணி என்ற சாதனையை ருவாண்டா அணி படைத்துள்ளது.

Related posts: