சானியா மிர்சா இணை சாம்பியன்!

Sunday, January 19th, 2020


ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார்.

இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா உக்ரைன் வீராங்கனையான நாடியா கிச்செனோக்குடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். லீக் போட்டிகளில் எளிதாக வென்ற சானியா மிர்சா ஜோடி, நாக்அவுட் சுற்றுகளிலும் அசத்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சானியா மிர்சா-நாடியா ஜோடி, சீனாவின் சாங் ஷூவாய், பெங் ஷூவாய் ஜோடியை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சானியா ஜோடி, 6-4, 6-4 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய சானியா மிர்சா, தான் பங்கேற்ற முதல் தொடரிலேயே சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: