புதிய உலக சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!

Monday, August 5th, 2019

சர்வதேச டி-20 போட்டியில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் ரோகித் சர்மா படைத்துள்ளார்.

ப்ளோரிடாவில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியில் ரோஹித் சர்மா 3 சிக்சர்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

தற்போது ரோகித் சர்மா 107 சிக்சர்களுடன் முதலிடத்திலும், கிறிஸ் கெயில் 105 சிக்சர்களுடன் 2வது இடத்திலும், நியூசிலாந்து வீரர் கப்தில் 103 சிக்சர்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

இதுமட்டுமின்றி டி-20 போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் 2422 ஓட்டங்கள், அதிக அரைசதம் 21 மற்றும் அதிக சதம் 4 அடித்த வீரர் பட்டியிலும் ரோகித் சர்மாவே முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா அபார துவக்கம் அளித்தார். அரைசதம் அடித்து அசத்தினார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோகித் 3 சிக்சர், 6 பவுண்டரி என 51 பந்துகளில் 67 ஓட்டங்கள் எடுத்தார்.

168 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. 15.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ஓட்டங்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது.

இதனையடுத்து, டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-0 என்ற வெற்றி கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

Related posts: