தொடர் தோல்வியிலிருந்து மீண்டது புனே!

Wednesday, April 27th, 2016
ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணிகள் விளையாடின. ஐதராபாத்தில் நடைபெற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற புனே அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தாமதித்தது.
ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக வார்னரும், ஷிகார் தவானும் களமிறங்கினர். தொடர்ந்து தனது அதிரடியால் மிரட்டி வந்த வார்னர் இந்தப் போட்டியில் ரன் கணக்கை தொடங்காமல் ஆட்டமிழந்தார்.
வார்னரை தொடர்ந்து டாரே 8 ரன்களிலும், மோர்கன் ரன் எதுமின்றியும், ஹூடா மற்றும் ஹென்றிஹூஸ் தலா ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் சன் ரைசர்ஸ் ஐதராபாத் 8.1 ஓவர்களில் 32 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. ஷிகார் தவான் மட்டும் நிதானமாக நின்று ஆடினார். சிறிது நேரம் நிலைத்து நின்ற ஓஜா 18 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஷிகார் தவான் சிறப்பாக விளையாடி 56(53) ரன்கள் எடுத்தார். வார்னர் உள்ளிட்ட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டழந்தனர்.
இதனையடுத்து 119 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் புனே அணி களமிறங்கியது. ஆனால் தொடக்க வீரரான ரகானே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழாந்தார். பின்னர் டு பிளிசிஸ் உடன் ஸ்மித் உடன் சேர்ந்தார்.
இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விக்கெட் விழாமலும் பார்த்துக் கொண்டனர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 81 ரன்கள் குவித்தது. டு பிளஸ் 30(21) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த கேப்டன் தோனியும் 5 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
11 ஓவர்கள் முடிவில் மீண்டும் மழை குறுக்கிட்டது. அப்போது புனே அணி 11 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு இன்னும் 56 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஸ்மித் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் டக்-அவுஸ் முறையின் படி புனே அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலமாக தனது தொடர் தோல்வி பயணத்திற்கு புனே முற்று வைத்தது.
முக்கியமான மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்திய திண்டா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதவுள்ளன.

Related posts: