ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமை கடந்த அரசாங்கத்தின் பாரிய தவறு – ஜனாதிபதி!

Tuesday, November 26th, 2019


சீனாவுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகை அடிப்படையில் வழங்கியமை கடந்த அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட தவறு எனவும் அந்த ஒப்பந்தம் குறித்து மீள ஆராயப்படும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகவியலாளர் நிதின் ஏ கோல்கியுடன் இடம்பெற்ற நேர்காணலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

கேள்வி : சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படும் போட்டியில் இலங்கை தொடர்புபடுவது எவ்வாறு என கூறுவீர்களா?

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, நாம் மத்தியஸ்த நாடாகவே இருக்க விரும்புகின்றோம். அவ்வாறு செய்ய முடியும். அதற்கு உலகில் பல உதாரணங்கள் உள்ளன. உலகமயமாக்கல் அரசியலை பொறுத்தவரை இந்து சமூத்திரம் மிக முக்கிய இடத்தை பிடிக்கின்றது.

எமது நாடு பூகோள ரீதியில் முக்கிய இடத்தில் உள்ளது. அனைத்து நாடுகளும் இலங்கை கடற்பகுதியை கடந்தே பயணிக்கின்றன. ஆகவே இந்த கடல் மார்கம் முழு உலகிற்கும் திறந்து விடப்பட வேண்டும்.

ஒரு நாட்டுக்கு மாத்திரம் இந்த மார்க்கத்தை கட்டுப்படுத்த முடியாது. ஆகவே அதிகாரமிக்க அரசாங்கங்களுடன் அதிகார மோதல்களில் ஈடுபட முடியாது.

சீனா ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு பெற்றிருந்தாலும் அதன் முழுமையாக கட்டுப்பாட்டை நாம் அந்த நாட்டுக்கு வழங்கவில்லை. குறித்த துறைமுகத்தை கடந்த அரசாங்கம் சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கியது.

சீனா எமது நட்பு நாடு என்றாலும் அபிவிருத்திக்கு அவர்களின் உதவி தேவைப்பட்டாலும் அந்த விடயம் தவறானது. அது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இதனை கூறுவதற்கு நான் அஞ்சவில்லை.

அந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மக்கள் அதிர்ப்தியடைந்துள்ளனர். ஒரு வருடம் இரண்டு வருடத்தை பார்காமல் எமது எதிர்காலம் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.

அதனால் அதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். வணிக நோக்கங்களுக்காக துறைமுகத்தின் ஒரு முனையை வழங்குவது மற்ற விடயமாகும்.

உண்மையை சொன்னால் இந்தியா, சிங்கபூர், ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் சீனாவின் தலையீடு தொடர்பில் பயத்துடன் உள்ளனர் என்பதை உலகின் மற்றைய அதிகாரமிக்க நாடுகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

ஒருவகையில் அது ஒரு வியாபார உடன்படிக்கையாகும். அதனால் இந்தியா, சிங்கபூர், ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளை இலங்கைக்கு வந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சீனாவுக்கு மாத்திரம் முதலீடு செய்ய வாய்ப்பளிக்க வேண்டாம்.ஒரு நாட்டுக்கு மாத்திரம் இடம்கொடுத்து விட்டார்கள் என பின்னர் குறை கூற வேண்டாம்.

இதனை நான் பகிரங்கமாகவே கூறுகின்றேன். நான் குறிப்பிட்ட நாடுகளும் இங்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்காக கடைப்பிடிக்கப்படும் சட்டவிதிகளில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளேன்.

நாட்டின் நம்மை கருதியே அதனை செய்யவுள்ளேன். முதலீடுவதற்காக நட்பு ரீதியான சூழலை நான் உருவாக்குவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: