ரஷ்யா , சீனாவின் கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்துவது தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுக்கப்படும்- தொற்றுநோயியல் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவிப்பு!

Tuesday, February 9th, 2021

போதுமான தரவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே, ரஷ்யாவின் ஸ்புட்னிக் – 5 மற்றும் சீனாவின் சினோஃபார்ம் ஆகிய கொரோனா தடுப்பூசிகளை இலங்கையில் பயன்படுத்த அனுமதிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் தொற்றுநோயியல் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏற்கனவே சினோஃபார்ம் தடுப்பூசி தொடர்பான தரவுகள் அந்த நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளன. எனினும் மேலதிக விபரங்கள் தேவையாக உள்ளன. அந்தத் தரவுகளை வெகுவிரைவில் வழங்குமாறு உரிய நிறுவனங்களிடம் கோரப்பட்டுள்ளது.

விபரங்கள் கிடைக்கப்பெற்றதும், ஆய்வுகள் நடத்தப்பட்டு, அவற்றுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் உள்ளதா? என்பதையும் அவதானித்து, இலங்கயில் அவற்றை பயன்படுத்த அனுமதிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சீனாவினால் இலங்கைக்கு 3 இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மொனராகலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்த முதல் அதிகாரி இவர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி 59 வயதுடையவர் எனவும் அவர் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறித்த பொலிஸ் அதிகாரி மாரடைப்பு காரணமாக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று குழந்தைகளின் தந்தையாகிய பொலிஸ் அதிகாரி ஓய்வு பெற தயாராக இருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 000

Related posts: