மக்களுக்கான சேவை பாதிக்கப்பட்டால் சமுர்த்தி வங்கி அரச வங்கியுடன் இணைக்கப்படும் – அமைச்சர் தயா கமகே எச்சரிக்கை!

Wednesday, April 17th, 2019

சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பால் மக்களுக்கான சேவைகள் பாதிக்கப்படுமாயின் அனைத்து சமுர்த்தி வங்கிகளையும் அரச வங்கிகளுடன் இணைத்து விடுவதே சரியான நடவடிக்கையாக அமையும் என்று சிறு கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உத்தேச அடையாள வேலை நிறுத்தம் மற்றும் புதுவருடப் பணிப்புறக்கணிப்பில் நேற்று ஈடுபட்டனர்.

அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தப்பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் நேற்றுமுதல் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் புத்தாண்டு சேமிப்பு வேலைத்திட்டத்தினைப் பணிப்புறக்கணிக்கவும் உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சமூக உள்கட்டமைப்பு மற்றும் சிறு கைத்தொழில் துறை அமைச்சர் தயா கமகே,

சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பால் சமுர்த்தி வங்கிகளின் சேவையைப் பெறுவதில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், அனைத்து சமுர்த்தி வங்கிகளையும் இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கியுடன் இணைத்து விடுவதே சரியான நடவடிக்கையாக அமையும்.

சிக்கல்கள் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிச்சயமாக தீர்வு வழங்கப்படும். அவர்களுக்கு நீதி மறுக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: