புதிய சுகாதார வழிகாட்டல்களை மக்கள் இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் – சுகாதார தரப்பினர் வலியுறுத்து!

Monday, July 5th, 2021

கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டு மக்கள் பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் குறித்த சுகாதார வழிகாட்டல்கள் இன்றுமுதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைமுறையிலிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுகாதார வழிகாட்டல்ககளை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவெளியிட்டுள்ளார்.

குறித்த வழிகாட்டலில் – பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்க, ஆசன கொள்ளளவில் 50 சதவீதமானோருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மேல் மாகாணத்தில் இந்த எண்ணிக்கை 30 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தனியார் / வாடகை வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் ஆசன எண்ணிக்கைக்கேற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஆடைத்தொழிற்சாலைகள் உட்பட ஏனைய தொழிற்சாலைகள் இயங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களைக்கொண்டு இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன்  சேவை அவசியத்துக்கு ஏற்ப, கடமைக்கு அழைக்கப்படக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவன பிரதானி தீர்மானிக்கலாம் என்றும் வீட்டிலிருந்து பணியாற்றக்கூடியவர்கள் அதனை நடைமுறைப்படுத்துவது சிறந்ததாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்டவில்லை. இருப்பினும் மணமகன் மற்றும் மணமகள் உள்ளிட்ட ஆகக்கூடியது 10 பேரை மாத்திரம் கொண்டு பதிவு திருமணத்தை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று இல்லாமல் ஒருவர் உயிரிழந்தால், சடலத்தைப் பொறுப்பேற்று 24 மணித்தியாலங்களில் இறுதிச் சடங்குகளை முன்னெடுக்க வேண்டும், இறுதிக் கிரியைகளில் 15 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் அடகுப்பிடிப்பு நிலையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் இச்சந்தர்ப்பத்தில் ஒரே தடவையில் மொத்தமாக 10 வாடிக்கையாளர்கள் மாத்திரமே சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வீட்டில் இடம்பெறும் விருந்துபசார நிகழ்வுகள் மற்றும் சமய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மத வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சமூக களியாட்ட விடுதிகளுடனான மதுபான சாலைகள், இரவு நேரக் களியாட்ட விடுதிகள், சூதாட்ட மற்றும் பந்தய நிலையங்கள் என்பன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்றும் சிறப்பங்காடிகள் மற்றும் ஆடை விற்பனை நிலையங்களில், அவற்றின் மொத்த இடப்பரப்பில் 25 சதவீதமான அளவு வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமே ஒரே தட வையில் அனுமதி என்றும் விற்பனை நிலையங்களை சுகாதார வழிமுறைகளுக்கமைய, திறக்க முடியும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஒரே தடவையில் 3 வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமே உள்நுழைய முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று உடற்பிடிப்பு நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிகையலங்கார நிலையங்களில் சுகாதார வழிகாட்டல்களின் கீழ் பணிகளை முன்னெடுக்க முடியும் என்றும் சிறைச்சாலை, முதியோர் மற்றும் சிறுவர் விடுதிகளுக்குச் செல்ல பார்வை யாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் திரையரங்குகள் மற்றும் நூதன சாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்றும் குறித்த வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: