பிழையான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களுக்கு எதிராக வருகின்றது புதிய சட்டம்!

Tuesday, December 20th, 2016

ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிழையானத் தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களுக்கு எதிராக புதிய சட்டத் திட்டங்கள் உருவாக்கப்படும் என  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

நீதிமன்ற சேவைச் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த நீதிபதிகளின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இணையத்தளங்களாலும் சமூக வலைத்தளங்களாலும் நாளாந்தம் நிந்திக்கப்படும் பிரதான நபராக தான் இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பை அண்மித்த புறநகர் பகுதியான ஜாஹெலவிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் நீதிபதிகளின் வருடாந்த மாநாடு இடம்பெற்றது. இதில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்த நிலையில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மைக்காலமாக நீதிபதிகளுக்கு எதிராக இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பிலும் கருத்துக்களை வெளியிட்டார்.

இணையத்தளங்களால் அதிகமாக விமர்சிக்கப்படுபவன் நான்தான். இதனால் என்னை மோசமாக சாடும் இணையத்தளங்களை பார்க்க வேண்டாம் என எனது பாரியாரிடமும் பிள்ளைகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளேன். எனினும் இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும். இன்றுள்ள சுதந்திரமான சூழலை இணையத்தளங்கள் தவறான வகையில் அப்பட்டமாக மீறி வருகின்றன.

விமர்சனங்கள் பழிச்சொற்கள் என்பன அரசியல்வாதிகளுக்கு பழகிப்போன விடையங்கள். ஆனால் இன்று நீதிபதிகள் உட்பட நீதித்துறையினரை இலக்கு வைத்து பாரிய பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவை அவர்களின் சுயாதீனத்தன்மைக்கும் கௌரவத்திற்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளன.

இவ்வாறான ஒரு நிலமை ஏற்பட்டுள்ளது குறித்து அரசாங்கம் கவலைப்படுகின்றது. எவ்வாறாயினும் அடிப்படையற்ற பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு ஒருவரின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.

இதற்காக புதிய சட்டங்களை தயாரிக்கவும் தீர்மானித்துள்ளோம். நல்லவர்கள் பலர் இருக்கும் சமூகத்தில் ஒருசில புல்லுருவிகள் இருந்துகொண்டு மேற்கொள்ளும் இவ்வாறான மோசமான நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்பட இடமளிக்க முடியாது.  அதனாலேயே பொயப்பிரசாரங்களை முற்கொள்ளும் இணையத்தளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் என்ற ரீதியில் தீர்மானித்துள்ளோம் என்றார்.

951d6f5f-2590-46b7-a504-308bd59bfa2a_16x9_600x338

Related posts: