நான் இழந்ததை பணத்தால்  ஈடுசெய்ய முடியாது : நாட்டுக்காக மீண்டும் களமிறங்குவதே எனது நோக்கம் – குசல்

Sunday, May 15th, 2016

நான் குற்றம் எதனையும் செய்யவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும். இதை அன்று முதல் கூறி வருகின்றேன். எனக்கு நான்கு வருடங்கள் தடை விதிக்கப்பட்டிருந்தால் ஏற்றுகொண்டிருக்கவே மாட்டேன். குற்றம் செய்யாமல் எவ்வாறு தண்டனையை ஏற்றுகொள்ள முடியும் என இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித் பெரேரா தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட் காப்பாளருமான  குசல் பெரேரா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குசல் ஊக்குமருந்து பாவித்திருக்கவில்லை என்பது தெரியவந்ததையடுத்து   சர்வதேச கிரிக்கட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை  நீக்கப்பட்டது.

இந்நிலையில் இதுதொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்ற போதே குசேல் ஜனித் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான் ‘கூறுவதற்கு நிறைய உள்ளன. சர்வதேச கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக திலங்க சுமதிபால நேற்றிரவு எனக்கு அறிவித்தார். இதனையடுத்து உடனடியாக அவரை நேரில் சென்று சந்தித்தேன்.

மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு வந்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை நான் உட்கொண்டிருந்ததாக நிறைய பேர் என் மீது குற்றம் சுமத்தியிருந்தனர். ஆனால் ஒரு சிலர் என் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். இதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

எனக்கு எதிராக பலவாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எவ்வாறாயினும் இன்று மிகவும் சந்தோசமாக இருக்கின்றேன். நான் தடைசெய்யப்பட்ட எந்த ஊக்க மருந்தையும் உட்கொள்ளவில்லை என்று கிரிக்கெட் சபையிடம் கூறியிருந்தேன். இதே நிலைப்பாட்டிலே நான் இருந்து வந்தேன். அது இன்று உண்மையாகியுள்ளது.

இன்றுமுதல் முதல் எனக்கு பயிற்சியில் ஈடுபட முடியும். அணியில் இணைவதற்கு முன்னர் கட்டாயம் பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியமாகும்.

எனக்கு நிகழ்ந்த சம்பவத்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை விளையாட்டு மூலமே நிவர்த்தி செய்ய முடியும். எனவே எதிர்வரும் காலங்கங்கில் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று இந்த பாதிப்பை நிவர்த்தி செய்ய முயற்சிப்பேன். எனது இழப்பை பணத்தால்  ஒப்பிட முடியாது. நாட்டுக்காக மீண்டும் களமிறங்குவதே எனது நோக்கமாகும்.

எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக எனக்கு கூறமுடியாது. காரணம் எனக்கு சாதகமான முடிவே வந்துள்ளது.

குற்றம் செய்யாமல் குற்றத்தை ஒத்துகொள்ள முடியாது. இதுவே எனது நிலைப்பாடாக இருந்தது. எனக்கு நான்கு வருடங்கள் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் ஏற்று கொண்டிருக்கவே மாட்டேன். நான் குற்றம் செய்யாமல் எவ்வாறு தண்டனையை ஏற்றுகொள்வது.

இதேபோன்று என்னுடைய ஆதரவாளர்களும் என் மீது கோபம் கொள்ளவில்லை. இதனால் எனக்கு பெரிய அழுத்தம் இருக்கவில்லை என்றார்.

Related posts: