துரித மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி யாழில் பாரிய ஆர்ப்பாட்டம் : பல்வேறு தரப்பினருக்கும் மகஜர் கையளிப்பு!
Monday, June 27th, 2016உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வலி. வடக்கின் மயிலிட்டி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் துரித மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை(27) யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.
முற்பகல்-10 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலில் கற்பூரம் கொளுத்தித் தேங்காய் அடித்து வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டப் பேரணி நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தைச் சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து வலி. வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரின் பிரதிகள் வடமாகாண ஆளுநர், வடமாகாண முதலமைச்சர் மற்றும் மனித உரிமைகள் காரியாலத்திலும், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திலும் கையளிக்கப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ” உண்மையில் எத்தனை ஏக்கர் காணி இராணுவம் வைத்துள்ளது என்பது அரசாங்கத்துக்குத் தெரியுமா? ” ” இன்னும் எமக்கு முகாம் வாழ்க்கையா” “மீள் குடியேற்றப்படும் வரை நிவாரணத்தைத் தா” உள்ளிட்ட பல்வேறு பதாதைகளைத் தாங்கியிருந்ததுடன் பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா, கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும் மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) மற்றும் கட்சியின் பிரதேச நிர்வாக செயலாளர்களும் கலந்து கொண்டு குறித்த பகுதி மக்களது போராட்டத்திற்கு வலுச்சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|