தப்பி சென்று கிராமத்திற்குள் கொரோனாவை பரப்புவோம் – வைத்தியர்களை எச்சரிக்கும் நோயாளிகள்!

Tuesday, October 27th, 2020

வைத்தியசாலையில் போதுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லையாயின், அங்கிருந்து தப்பி சென்று கிராமத்திற்குள் கொரோனாவை பரப்பப் போவதாக சிகிச்சை பெறும் நோயாளிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

திவுலப்பிட்டிய கொரோனா நோயாளர்கள் குழுவினரின் செயற்பாடு காரணமாக வைத்தியசாலை நிர்வாகம் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளது.

தங்களுக்கு கிடைக்கும் உணவு சுவையில்லை எனவும், போதுமான அளவு குளியலறை மற்றும் ஏனைய வசதிகள் இல்லை எனவும் கூறி நோயாளர்கள் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.

நோயாளிகள், வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்தியதுடன், குறித்த வசதிகளை வழங்கவில்லை என்றால் வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்று கிராமத்தில் கொரோனா பரப்புவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

தற்போது கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ள திவுலபிட்டிய வைத்தியசாலையில் 102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த குழுவினருக்குள் டொக்யார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 15 பேர் இவ்வாறு வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இந்த நபர்களுக்காக டொக்யார்ட் நிறுவனம் உலர் உணவுகளை வைத்தியசாலைகளுக்கு வழங்குவதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்த அச்சுறுத்தல் காரணமாக வைத்தியசாலையை சுற்றியுள்ள பொலிஸாருக்கும், பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகதார பிரிவு தெரிவித்துள்ளதாக அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: