சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளை இன்றுமுதல் ஆரம்பம் – கொள்கலன்களை பெற்றுக்கொள்ள மின் பட்டியல் அவசியம் எனவும் தெரிவிப்பு!

Monday, July 11th, 2022

நாட்டை வந்தடைந்த 3700 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளை இன்றுமுதல் லிட்ரோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய, இன்றும், நாளையும் கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கும், நாளைமறுதினம் ஏனைய இடங்களுக்கும் எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், சமையல் எரிவாயு கொள்கலனை கொள்வனவு செய்யும் போது, கடந்த மே மாத மின்சார பட்டியலை வைத்திருத்தல் அவசியமாகும்.

இதன்மூலம் அதிகளவான எரிவாயு கொள்கலனை பதுக்கி வைக்கும் செயற்பாட்டை தவிர்க்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், லிட்ரோ நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் ஊடாக எரிவாயு விநியோகிக்கப்படும் நிலையங்களை அறிந்துக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்றுமுதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் 4 ஆயிரத்து 910 ரூபா என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

எவ்வாறாயினும், 5 கிலோகிராம் மற்றும் 2.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்பதுடன் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

000

Related posts: