கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்ட பெண் இலங்கையின் பல பகுதிக்கும் சென்றமை உறுதி!

Tuesday, January 28th, 2020

உலகை அச்சுறுத்தும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்ட சீன பெண் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

43 வயதான இந்த சீன பெண் கடந்த 19 ஆம் திகதி மேலும் சில சீனர்களோடு இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்காக வந்துள்ளார் என சுசுகாதார அமைச்சின் இயக்குனர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் தனது சுற்றுலா குழுவுடன் மீண்டும் சீனா நோக்கி செல்வதற்கு ஆயத்தமாக இருந்த போது காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் அங்கொடை IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எப்படியிருப்பினும் அவருடன் வந்த ஏனைய சீனர்கள் மீண்டும் தங்கள் நாட்டை நோக்கி சென்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இந்த பெண் பயணித்த இடங்கள் மற்றும் அவர் தங்கியிருந்த இடங்கள் தொடர்பில் தகவல்கள் அனைத்தும் சுகாதார அதிகாரிகளினால் சேகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் இயக்குனர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் பயணித்த இடம் மற்றும் தங்கியிருந்த இடத்திற்கு சென்று சோதனையிடுவதற்கு சுகாதார சேவை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அங்கிருந்த ஏனையவர்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த பெண்ணின் இரத்த மாதிரியை மேலதிக பரிசோதனைக்காக வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: