குற்றப் புலனாய்வுப் பிரிவின் புதிய பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி நிஷாந்த டி சொய்ஸா நியமனம்!

Saturday, October 17th, 2020

குற்றப் புலனாய்வுப் பிரிவின் புதிய பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி நிஷாந்த டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்குவந்து குற்றப் புலனாய்வுப்பிரிவுக்கு நியமிக்கப்படும் மூன்றாவது பிரதானியாக நிஷாந்த டி சொய்ஸா விளங்குகின்றார்.

அந்தவகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு படைப் பிரதானியாக கடமையாற்றிய டபிள்யூ திலகரத்ன இதற்கு முன் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவர் அமைச்சர்கள் மற்றும் பிரபுக்களின் பாதுகாப்பு படைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக, பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பணிப்பாளராக இருந்த பிரசன்ன அல்விஸ் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி நிஷாந்த டி சொய்ஸாவின் புதிய நியமனத்தை தொடர்ந்து, அவர் மீண்டும் பழைய இடத்திற்கே நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இதேவேளை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக செயற்பட்டிருந்த ஷாணி அபேசேகர, சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் வழக்கு தொடரப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: