உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எந்தக்காரணத்திற்காகவும் சிறுபோகத்தில் பயிர்ச் செய்கையை கைவிட வேண்டாம் – விவசாயிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை!

Tuesday, May 31st, 2022

உரத் தேவையைப் பூர்த்தி செய்ய பல நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எந்தக்காரணத்திற்காகவும் சிறுபோகத்தில் பயிர்ச் செய்கையை கைவிட வேண்டாம் என அனைத்து விவசாயிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் உணவுப் பாதுகாப்புக்காக விரிவான அரச – தனியார் கூட்டு வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைக் குறைத்தல் தொடர்பான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது உர இறக்குமதி, விநியோகம், முறையான முகாமைத்துவம், விழிப்புணர்வு, விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கிடையில் ஒருங்கிணைப்பு என்பனவற்றிற்காக தேசிய உரக் கொள்கையொன்று உடனடியாக வகுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இரசாயன அல்லது சேதனப் பசளையைப் பயன்படுத்தி பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விவசாய அமைச்சின் பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபோகத்தில் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படாத வயல் நிலங்களைக் கண்டறிந்து, பயறு, கௌபி, சோயா உள்ளிட்ட அத்தியாவசியப் பயிர்களைப் பயிரிட ஊக்குவிப்பதன் மூலம், விவசாயிகள் அதிக வருமானம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க முடியும்.

சோளம், சோயா மற்றும் ஏனைய பயிர்களை பயிரிடுவதற்காக தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான கந்தகாடு விவசாய நிலத்தை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் பயிரிடப்படாத நிலங்களில் பெரும் பகுதி அரசுக்குச் சொந்தமானது. அந்த நிலங்களை கண்டறிந்து இளம் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.

வீட்டுத்தோட்டம் மற்றும் அரச அலுவலக நிலங்களில் பயிரிடுவதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: