உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 11 இலட்சம் ரூபா வரை சலுகைக்கடன் – அமைச்சரவை அங்கீகாரம்!

Friday, December 8th, 2017

உயர்கல்வி நிறுவனங்களில் பட்டதாரி கற்கைநெறிகளை தொடரும் மாணவர்களுக்கு சலுகைக் கடன் வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.

இது தொடர்பாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற வெட்டுப்புள்ளி முறைமையின் மூலம் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்கள் அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டக் கற்கைநெறிகளை தொடர்வதற்காக 8 இலட்சம் ரூபா வரையான வட்டியற்ற சலுகைக்கடன் வசதிகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டமொன்றை 2017 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதற்கு சமாந்தரமாக அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் கல்வியியல் பட்டப்படிப்பினை தொடர்வதற்காக க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்திய இளம் சமூகத்தினரின் அன்றாட செலவுகள் உள்ளடங்கும் வகையில் 1.1 மில்லியன் ரூபா வரை கடன் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதனடிப்படையில், ஏனைய கற்கை நெறிகளை தொடரும்; மாணவர்களுக்கும் ஏனைய செலவுகளுக்காக வருடாந்தம் 75,000 ரூபா வீதம் மேலதிகமாக வழங்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, குறித்த சலுகைக்கடன் தொகையினை மூன்று வருட பட்டப்படிப்பிற்காக வேண்டி 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா வரையும் நான்கு வருட பட்டப்படிப்பிற்காக வேண்டி 11 இலட்சம் ரூபா வரையும் அதிகரிப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts: