வடக்கில்  பொலிஸாருக்கு எதிராக 40 முறைப்பாடுகள் பதிவு!

Friday, August 10th, 2018

வடக்கில் பொலிஸாருக்கு எதிராக 40 முறைப்பாடுகளில் 36 முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் வடக்கு மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு அமைந்துள்ளது. பொலிஸாரின் அத்துமீறிய செயற்பாடுகள் குறித்து அங்கு இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 36 முறைப்பாடுகளுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழு தெரிவித்தது.

இதேவேளை பொலிஸாரின் அத்துமீறிய செயற்பாடுகள் பற்றி பயமின்றித் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறையிடலாம் என்று அந்த ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகள் மீது பொலிஸார் செயற்படாமை, பொலிஸார் பொதுமக்களைத் தாக்குதல், துன்புறுத்தல், அதிகார முறைகேடு, பக்கச்சார்பாக நடந்து கொள்ளல், சட்டவிரோத கைது, தடுத்து வைத்தல், பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல், முறைகேடுகள், காவலில் இருக்கும்போது மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள்,இழப்புகள் போன்றன தொடர்பில் நடவடிக்கை எடுக்க ஆணைக்குழுவில் முறையிட முடியும் என்று ஆணைக்குழுவினர் மேலும் தெரிவித்தனர்.

Related posts: