மீனவர் பிரச்சினை குறித்து மீண்டும் இந்தியாவுடன் பேச்சுக்களை நடத்த இலங்கை முடிவு!

Friday, August 5th, 2016

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மீண்டும் இரு நாட்டு மீனவர்களிடையிலும் பேச்சுக்களை ஆரம்பிக்க இலங்கை அரசு தீர்மானம் மேற்கொண்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று(4) தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பேச்சுவார்த்தைக்காக முதலில் இலங்கை மீனவர்கள் இந்தியா செல்வதற்கும் அதனையடுத்து இந்திய மீனவர்களை இலங்கைக்கு அழைப்பதற்கும் அரசாங்கம் இணக்கம் கண்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“இலங்கை, இந்திய மீனவர்களிடையிலான பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். சுமார் ஒரு மாத காலத்திற்குள் இந்தியாவிலும் இலங்கையிலும் இரண்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்ததும் மத்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்காக இலங்கையிலிருந்து இராஜதந்திர குழுவொன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.” என்றும் அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்திய மீனவர்களிடையே மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தல் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீன்பிடி படகுகளை விடுவித்தல் ஆகிய கோரிக்கைகளுடன் கூடியதாக இந்திய மத்திய அரசாங்கம், அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பேச்சுவார்த்தைக்காக புதுடெல்லி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்புக் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் தீர்க்கமாக ஆராய்ந்ததன் பின்னரே முதலில் இருநாட்டு மீனவர்களிடையிலும் அதனைத் தொடர்ந்து இராஜதந்திர ரீதியாக உயர் மட்டப் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.

எவ்வாறான போதும் இலங்கை மீனவர்களின் இலாபம் மற்றும் நலன்புரி குறித்தே எமது கவனம் இருக்கும். அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் இலங்கை மீனவர்களின் நிலைப்பாடு மற்றும் அபிப்பிராயங்களுக்கு நாம் முன்னுரிமை அளிப்போம். அதனை மீறி அமைச்சர்கள் மற்றும் அமைச்சு மட்டத்தில் எவ்வித இரகசிய பேச்சுவார்த்தையோ அல்லது ஒப்பந்தமோ இடம்பெற மாட்டாது என்றும் அமைச்சர் அமரவீர உறுதி அளித்தார்.

“இலங்கை மீனவர்களை பாதுகாக்கும் அதேநேரம் இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதற்கு எம்மாலான ஆக்கூடிய முயற்சிகளை முன்னெடுப்போம். இதுவரை காலமும் தமிழ் நாட்டிலிருந்தபடி எம்முடன் மறைமுகமாக மோதி வந்த தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா, முதற் தடவையாக இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகு பாவனையை தடைசெய்யுமாறு பிரதமர் மோடிக்கு முன்வைத்திருக்கும் யோசனையை அறிந்து நாம் மகிழ்ச்சி அடைந்தோம். அவரது இந்த யோசனையை உடன் அமுல்படுத்துமாறு நாமும் பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளோம்” என்றும் அமைச்சர் அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: