நாட்டில் இதுவரை இரண்டு இலட்சத்து 79 ஆயிரத்துக்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு – தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் அறிவிப்பு!

Sunday, September 27th, 2020

நாட்டில் இதுவரை இரண்டு இலட்சத்து 79 ஆயிரத்து 740 பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து மேலும் 22 பேர், பூரணமாக குணமடைந்து இன்று வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 208 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தொற்று உறுதியானவர்களில் 128 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 25 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 3 ஆயிரத்து 349 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 465பேர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 45, ஆயிரலத்து 175பேர், இதுவரையில் மொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், முப்படையினரால் பராமரிக்கப்பட்டுவரும் 67 தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில், 7,233 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: