சாரதி அனுமதிப்பத்திரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டதால் குழப்பம்!
Thursday, November 3rd, 2016
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக நடத்தப்படும் எழுத்துப் பரீட்சை 2ஆவது முறையாக நேற்று மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. அதனால் பரீட்சார்த்திகள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டது. குழப்பங்களுக்கான தீர்வு விரைவில் கொழும்பு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக கடந்த மாதம் 25ஆம் திகதி நடைபெறவிருந்த எழுத்துப்பரீட்சை யாழ்.மாவட்டத்தில் கடைபிடிக்கப்பட்ட முழு அடைப்புக் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. குறித்த பரீட்சை நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நடைபெறவில்லை.
பரீட்சை ஒத்திவைக்கப்பட்டதால் மீண்டும் பரீட்சைக் கட்டணம் செலுத்த வேண்டுமா? , 3ஆம் தடைவ பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்கள் புதிதாக விண்ணப்பம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுமா? என்ற குழப்பங்கள் பரீட்சார்த்திகள் மத்தியில் ஏற்பட்டன. பரீட்சை ஒத்திவைக்கப்பட்டது தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை என யாழ்.மாவட்டச் செயலக போக்குவரத்து திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமைக் கரியாலத்தால் பரீட்சை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் தொழில்நுட்பக் கோலாறு காரணமாக நேற்று பரீட்சை நடைபெறவில்லை. இவ்வாறு பரீட்சை நடைபெறாமல் போகும் சந்தர்ப்பத்தில் பரீட்சார்த்திகளுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமையகத்தால் பரீட்சார்த்திகளுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவது உண்டு. தற்போது பாதிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகளுக்கும் தலைமைக் காரியாலயத்தின் கட்டளை கிடைக்கப்பெற்றவுடன் அவர்களுக்கான சலுகைகளுடன் பரீட்சை மீண்டும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
|
|