உலகில் வருடாந்தம் புற்றுநோய் காரணமாக 1.5 மில்லியன் மக்கள் பாதிப்பு!

Wednesday, May 11th, 2016

உலகில் புற்றுநோய் காரணமாக வருடத்திற்கு 1.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுடைய சிகிச்சைக்கு உதவுதல் மிகப்பெரியதொரு விடயமாகும் என கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி ரி.ஜெயசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கொடிவாரத்தின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இயற்கை என்பது மிகவும் அழகான செயற்பாடு ஆனால் அது ஏற்றத்தாழ்வுகளைப் பெற்றிருக்கிறது. மலைகள் உயர்வாக இருக்கிறது, பள்ளத்தாக்குகள் தாழ்வாகக் கிடக்கின்றது. ஆனால் இயற்கை செய்கின்ற ஒரு அழகான காரியம் இவற்றை ஏதோ ஒரு வகையில் சமப்படுத்துகின்றது.

அதே போன்று மனித சமூகத்தையும் கருத்தில் கொண்டால் பல ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. சமன் என்பதற்கும், சமத்துவம் என்பதற்கும் இடையில் பல ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.

இந்த நிலையில் நோயைப் பொறுத்தவரையில் அதுவும் சமனாகவும் இருக்கிறது சமத்துவமாகவும் இருக்கிறது. இந்த ஒரு கைங்கரியத்தைப் பற்றி நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

இன்று புற்றுநோய் என்பதும் மிக முக்கியமான, ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தில் காணப்படும் ஒரு நோயாகும். கூடுதலாக வளர்முக நாடுகளில் காணப்படுவதும் சிகிச்சையளிக்க முடியாத, பெறமுடியாத நிலையில் இருப்பதும் அந்த நோயினுடைய தன்மை குறித்து முக்கியமாகக் காணப்படுகின்றது.

புற்றுநோய் காரணமாக கிட்டத்தட்ட 15 இலட்சம் நபர்கள் ஒவ்வொரு வருடமும் உலகத்தில் இறந்து கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த பாதிப்பினைத் தணிக்கும் வகையில் இந்தச் சங்கமானது செயற்படுவது பாராட்டத்தக்கது.

இந்த புற்றுநோய் சங்கமானது கடந்த 35 வருடங்களாக செயற்பட்டு குறிப்பிட்டளவான பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியிருக்கிறார்கள் என்பது மிகப் பெரிய செயலாகும்.

புற்றுநோய் பற்றிய அறிவில்லாமல், விழிப்புணர்வில்லாது பெருந்தொகை மக்கள் இருக்கிறார்கள். நோய் வந்தவுடன் அதற்கான தீர்வுகளைத் தேடுவதனை விட, உருவாகாது தடுப்பதற்கான நடைமுறைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

புற்றுநோயின் உருவாக்கத்தில் பண்டைய உணவு முறைகளில் ஏற்பட்ட மாறுபாடு பழக்க வழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பது ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவருகிறது.

அந்த அடிப்படையில் எந்த உணவினை உண்ணக்கூடாது, கால நேரம் பார்த்து உணவுகளை உட்கொள்வது என்பவற்றில் இதன் பயன் இருக்கிறது.

மட்டக்களப்பிலும் சரி, இலங்கையிலும் சரி புற்றுநோயின் பரவல் அதிகமாக இருக்கிறது. இதனைப் பரவாமல் தடுப்பதற்காகச் செயற்படுவது முக்கியம் என்று கருதுகிறேன் என்று உபவேந்தர் தெரிவித்தார்.

Related posts: