ஆசிரிய உதவியாளர்களாக  உள்ளவர்கள் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Friday, September 16th, 2016

வன்னி யுத்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படாமல் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டவர்களாக பாதிக்கப்பட்டுள்ள வன்னி ஆசிரிய உதவியாளர்களைக் காலம் தாழ்த்தாது தம்மை ஆசிரிய உதவியாளர்களாக நியமித்த 01.07.2013ஆம் திகதியிலிருந்து இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்த்து தமக்குரிய சம்பள நிலுவைகளையும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா ஆகியோருக்கு வன்னி ஆசிரிய உதவியாளர் ஒன்றியத்தின் மூலம் கடிதம் அனுப்பிக் கோரிக்கை விட்டுள்ளார்கள்.

அவர்களால் அனுப்பப்பட்ட கோரிக்கைக் கடிதத்தில்,

‘யுத்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற வன்னிப் பகுதிகளில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாகச் சேவையாற்றி வரும் எமக்கு கடந்த 2005ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஆசிரியர் நியமனம் இன்றுவரை வழங்கப்படாத நிலையில் நாம் தொடர்ந்தும் புறக்கணித்து ஒதுக்கப்பட்டு வருகின்றோம்.

நீண்ட போராட்டங்களைத் தொடர்ந்து கடந்த 2013ஆம் ஆண்டு எமக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதாகக் கூறி ஆசிரிய உதவியாளர் என்னும் நியமனம் வழங்கி 6000 ரூபா சம்பளம் வழங்கப்பட்டது.

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பயிற்சிகளை நிறைவுசெய்து 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் எம்மை இலங்கை ஆசிரியர் சேவையினுள் உள்ளீர்ப்புச் செய்து எமது சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

வன்னியில் நடைபெற்ற யுத்தங்களாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் ஆசிரியர் சேவையினுள் உள்ளீர்க்கப்படாமல் நீண்ட காலமாக மிகவும் குறைந்த சம்பளத்துடன் ஆசிரிய சேவையாற்றி வரும் எமது நிலையினைக் கருத்திற்கொண்டு எமக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்பட்ட 01.07.2013ஆம் திகதியிலிருந்து வன்னி ஆசிரிய உதவியாளர்கள் 500 பேரையும் இலங்கை ஆசிரியர் சேவையினுள் உள்ளீர்ப்புச் செய்து எமக்கான சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளையும் 01.07.2013ஆம் திகதியிலிருந்து வழங்க நடவடிக்கை எடுத்து உதவுமாறு தங்களை மிகுந்த நம்பிக்கையுடனும்எதிர்பார்ப்புடனும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.’ என்றுள்ளது.

2

Related posts: