வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் கடத்தலை முறியடிக்க இலங்கை – இந்திய அரசுகளின் கூட்டு நடவடிக்கை அவசியம்!  – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, May 31st, 2016

வடக்கில் தற்போது அதிகரித்துள்ள போதைப் பொருட்களை கடத்திவரும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசும், இந்திய அரசும் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டு அதன் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதன் ஊடாக அதனைக் கட்டுப்படுத்துவதற்குரிய சாத்தியப்பாடுகள் இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், வடக்கில், குறிப்பாக யாழ் குடாநாட்டின் கரையோரப் பகுதிகளினூடாக நம் நாட்டுக்கு தற்போது அதிகளவில் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு, அவற்றில் பெரும்பாலானவை தென் பகுதிக்குக் கொண்டு வரப்படுவதாக அறிய முடிகிறது. இதனூடாக யாழ் குடா நாட்டில் போதைப் பொhhருள் பாவனையானது படிப்படியாக அதிகரித்து வரும் நிலையே காணப்படுகிறது.

போதைப் பொருள் பாவனை காரணமாக யாழ் குடாநாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற சமூகச் சீர்கேடுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு காவல்த்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடரவே செய்கின்றன என்பதை அறியக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான கடத்தல்களில் ஓரளவு பொருட்கள் காவல்த்துறையினரால் பிடிக்கப்படுகின்ற போதிலும், அவை அனைத்தும் தரைப் பகுதிகளில் வைத்தே பிடிக்கப்படுகின்றன. எனவே, இவற்றை கடலில் வைத்தே பிடிப்பதற்கான ஏற்பாடுகளை கடற் படையினர் ஊடாக பரவலாக்கப்படுவது அவசியமாகும். அதே நேரம் இந்தியக் கரையோரப் பகுதிகளினூடாக இவ்வாறான போதைப் பொருட்கள் – குறிப்பாக கேரள கஞ்சா போன்றவை அதிகளவில் கடத்தப்படுவதாகவும் அறிய முடிகிறது. எனவே, இதனைத் தடுப்பதற்கு இந்திய அரசின் உதவியும் பெறப்படுதல் அவசியமாகும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

 

Related posts:


தண்ணீர் பவுஸர்களுக்கும், பால் பௌஸர்களுக்கும்  இறக்குமதி வரிச்சலுகை கொடுக்க வேண்டும் - நாடாளுமன்றில் ...
உள்ளூராட்சி தேர்தலை  வென்றெடுத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்போம்  -வேட்புமனு தாக்கல் செய்த...
கள் இறக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் தடையை உடன் அகற்ற வேண்டும் - டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!