மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்னும் வேலைத்திட்டத்தை அர்த்தபூர்வமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும்- செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Thursday, August 31st, 2017மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்னும் வேலைத்திட்டத்தை அர்த்தபூர்வமாகவும் அர்ப்பணிப்புடனும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வட்டார நிர்வாக செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களுடனான விஷேட ஒன்றுகூடலில் சிறப்புரையாற்றுகையிலேயே செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் அரசியலில் மேலும் அதிகளவு பலப்படுகின்ற போதுதான் தமிழ் மக்களின் வேதனைகளையும் ஆறா வடுக்களையும் மட்டுமல்லாது அவர்களுக்கான தேவைகளையும் இனங்கண்டு தீர்வுகளை பெற்றுக்கொள்ளமுடியும் .காலாகாலமாக தமிழ் மக்கள் தமக்கான ஒரு அரசியல் தலைமையை சரியான வகையில் இனங்கண்டுகொள்ளாமையால் இற்றைவரை பல துயரங்களை சுமந்து வாழவேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
தமிழ் மக்களது தலையெழுத்துக்கள் மாற்றப்பட வேண்டுமானால் சரியான அரசியல் தலைமைகளை மக்கள் இனங்கண்டு அவர்களை தெரிவு செய்யவேண்டும். அவ்வாறான ஒரு சூழ்நிலையை தமிழ் மக்கள் உருவாக்கும்போதுதான் அவர்கள் தமது அரசியலிலும் வாழ்வியலிலும் மேம்பாடு காண முடியும்.
அதை உணர்ந்து கொண்டு மக்கள் எதிர்காலங்களில் செயற்படுவார்களேயானால் அவர்களது வாழ்வியலை எம்மால் பல்வேறு வழிகளிலும் மாற்றம் காண செய்ய முடியும் என்பதுடன் அரசியல் தீர்வுக்கான வழிமுறைகளையும் வெற்றிகொள்ள முடியும் என தெரிவித்தார்.
மேலும் குறித்த வட்டார நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் தொடர்பாக கட்சியின் வட்டார நிர்வாக செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்த டக்ளஸ் தேவானந்தா எதிர்காலத்தில் எத்தகைய அரசியல் வழிமுறைகளூடாக மக்களுக்கான தேவைப்பாடுகளை முன்னெடுத்து நாம் எடுத்துக்கொண்ட இலக்கின் பெறுபேற்றை அடைய முடியும் என்றும் விரிவாக எடுத்துரைத்தார்.
Related posts:
|
|