நாபாவும் தேவாவும் எனதிரு கண்கள் என்று கூறிய அண்ணாவை இழந்துவிட்டேன் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, June 2nd, 2016

ஈழ விடுதலைப் போராட்டத்தில் பெரு விருட்சமாக வளர்ந்து வந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) இயக்கத்தின் அத்திவாரமாக இந்திய மண்ணில் எம்மைத் தாங்கிப்பிடித்த ஸ்டாலின் அண்ணா அவர் பெரிதும் நேசித்த ஈழ மக்களை பிரிந்துவிட்ட செய்தி மிகுந்த வேதனையானது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது –

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் போராட்ட வழிமுறையையும், இடதுசாரித்துவக் கொள்கைகளையும் பெரிதும் மதித்து, தனது அரசியல் பணிகளுக்கும், சமூகப் பணிகளுக்குமிடையேயும், தன்னை முழுமையாக அர்ப்பணித்து அவர் ஆற்றிய பங்களிப்பையும், தமிழ் இனத்தின் மீது அவர் கொண்டிருந்த பாசத்தையும் மெய்சிலிர்க்க வைத்த பொழுதுகளை எண்ணிப் பார்க்கின்றேன்.

ஆரம்பத்தில் நமது ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின்தளமாக இந்திய தேசம் இருந்தது.

அங்கே ஈழ மக்களின் விடுதலையை நேசிப்பவர்களும், அதற்காக பங்களிப்புச் செய்தவர்களும் இருந்திருக்கின்றார்கள். இன்னும் இருக்கின்றார்கள்.

ஆனால் ஸ்டாலின் அண்ணா போன்ற தியாகிகளை, அர்ப்பணச் சிந்தனையாளர்களை காண்பது மிக அரிதானதாகும்.

சட்டம் படித்திருந்தாலும், பெரியாரின் கொள்கைகளாலேயே தன்னை நிறைத்திருந்தார்.

கும்பகோணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்திற்கு அடைக்கலம் கொடுத்த பெரு விருட்சமாவே அண்ணா இருந்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்திற்குள் இருந்த சூழ்ச்சிக்காரர்களும், சதிகாரர்களும் திட்டமிட்டு எனக்கும், நாபா தோழருக்கும் இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்தியிருந்தபோது, என்னையும், எனது நியாயங்களையும் நன்றாகப் புரிந்திருந்த ஸ்டாலின் அண்ணா, எங்கள் இருவரையும் மதித்தார்.

நானும், நாபா தோழரும் இணைந்து ஈழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று உண்மையான விருப்பம் கொண்டிருந்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தை தத்தெடுத்து தனது பூர்வீகச் சொத்துக்களை விற்று தோழர்களை பாதுகாத்த மாசற்ற மகான் ஸ்டாலின் அண்ணா என்றால் அது மிகையாகாது.

தனது இரும்புக் கடைச்சல் பட்டறையை, பேக்கரியை அப்படியே ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் மோட்டார் தயாரிப்பு நிறுவனமாக மாற்றிய ஸ்டாலின் அண்ணாவை கௌரவப் படுத்தியே ஈ.பி.ஆர்.எல்.எவ் தயாரித்த ss50, ss60, ss90, ss110 மோட்டார்களுக்கான பெயர்கள் சூட்டப்பட்டது.

அதில் SS என்பது மோட்டர்களை வடிவமைத்து தயாரித்த தோழர் சின்னவனின் முதல் எழுத்தும், தனது பட்டறையை தந்துதவியதற்காக ஸ்டாலின் என்பதன் முதல் எழுத்துக்களும் தான் என்பது எமது ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் ஸ்டாலின் அண்ணாவின் புகழை அழிக்க முடியாமல் பதித்து வைத்துள்ளது.

தோழமையோடும், சகோதர வாஞ்சையோடும் என்மீது அன்பு செலுத்திய ஸ்டாலின் அண்ணாவை நானும், ஈழ மக்களும் இழந்துவிட்டோம்.

ஈடுசெய்ய முடியாத இழப்புக்களில்; அண்ணாவின் இழப்பு முக்கியமானதாகும்.

அவரின் பேரிழப்பில் துயருற்றிருக்கும் அண்ணாவின் குடும்பத்தினரினதும், உறவினர்களினதும், நண்பர்களினதும், தோழர்களினதும் துயரத்தில் நானும் பங்கெடுக்கின்றேன்.

ஸ்டாலின் அண்ணாவுக்கு எனது தோழமை நிறைந்த புரட்சிகர அஞ்சலிகள்  என குறிப்பிட்டுள்ளார்.

Untitled-4 copy

13344703_1549813261981766_4697730168628273360_n

Related posts: