ஓய்வுக்கு பின்னரும் ஓய்வின்றி உழைத்த சமூகப்பற்றாளன் சவுந்தரராஜா – அஞ்சலி உரையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Sunday, December 30th, 2018தான் ஒரு அரச உத்தியோகத்தராக இருந்துகொண்டும் கடும் யுத்த காலத்திலும் வட்டுக்கோட்டை பிரதேச இளைஞர்களை கலை கலாசார பண்பாடுகளில் இருந்து பிறளவிடாது அவர்களை ஒரு உன்னதமான நிலைக்கு கொண்டு வருவதற்காக போராடி அதில் வெற்றிகண்ட ஐயாத்துரை சவுந்ததராஜா என்னும் ஒரு மூத்த சமூகப் போராளியாயை இன்று நாங்கள் இழந்துவிட்டோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது அஞ்சலி உரையில் தெரிவித்துள்ளார்.
அமரர் ஐயாத்துரை சவுந்ததராஜா உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த 26.12.2018 அன்று காலமானார். இந்நிலையில் வட்டுக்கோட்டை சிவன்கோவிலடியிலுள்ள இல்லத்தில் நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டு அன்னாரின் பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் அஞ்சலி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் –
பொதுவாழ்வு, தனிப்பட்ட வாழ்வு, வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் சாதித்துக்காட்டியவர் அமரர் சவுந்தரராஜா. வட்டுக்கோட்டை பிரதேசத்தில் உபதபால் அதிபராக கடமையாற்றிய அமரர் சவுந்தரராஜன் அவர்கள் சமூக அக்கறை மட்டுமல்லாது எமது இளம் சமூகத்தினரிடையே அழிந்துவரும் நிலையில் உள்ள விவசாயத்துறையை அழியவிடாது நவீன முறையில் மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்குடன் கிறீன் விஷ்வா என்ற விவசாய அமைப்பொன்றை நிறுவி அதன் ஸ்தாபகராக இருந்து விவசாய துறைக்கான வளர்ச்சியை பல்துறை சார்ந்த விற்பனர்களூடாக தன்னலமற்ற வகையில் செய்து எம் தேசத்தில் அத்துறையை காலூன்றவைப்பதில் வெற்றிகண்டள்ளார்.
அதுமட்டுமல்லாது மாணவர்கள் அறநெறியை பின்பற்ற வேண்டும் என்ற நோக்குடன் வட்டுக்கோட்டை இளைஞர் ஒன்றியம் அமைத்து பிரதேசத்தில் வாழும் இளம் சமூகத்தினருக்கு நல்வழியை காட்டினார்.
தமது பிரதேசத்தின் வளங்கள் சிதைந்துவிடாத வகையில் வட்டுக்கோட்டை அபிவிருத்தி நிறுவனம், வட்டுக்கோட்டை கடல்வலை உற்பத்தி தொழிற்சாலை என பல நிறுவனங்களை அமைத்து அப்பகுதி இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சிகளையும் தொழில் வாய்ப்புக்களையும் கொடுத்து இப்பிரதேச அபிவிருத்தியை தூக்கி நிறுத்தவதில் அயராது பாடுபட்டார்.
இவ்வாறு தனது வாழ்நாள் முழுவதும் மக்கள் நலன்களை முன்னிறுத்தியதான சேவையில் இருந்து அதை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஓய்வின்றி உழைத்த ஒரு சமூகப் போராளி இன்று இப்பிரதேசத்தை விட்டு நிரந்தரமாகவே ஓய்வெடுத்துச் சென்றுவிட்டார்.
ஆனாலும் ஓய்வெடுத்தக் கொண்டது சவுந்தரராஜா என்ற ஆத்மா மட்டுமே அவரது கனவுகளல்ல. அந்தவகையில் அவர் விட்டுச் சென்ற கனவுகளை முன்னெடுத்துச் சென்று அவரின் கனவுகளை நனவாக்குவதே மறைந்த அமரர் சவுந்தரராஜா அவர்களுக்கு வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் செய்யும் பிரதி கடமையாகும்.
அந்தவகையில் அவரது நினைவுகளை மிகுந்த வேதனையோடு இந்த இறுதி நிகழ்வில் நினைவுபடுத்தவதுடன் அன்னாரின் இழப்புக் குறித்து ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெதரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா அமைதியாக சாந்தி பெறட்டும் என மேலும் தெதரிவித்துள்ளார்.
Related posts:
|
|