இயலுமானவரை மக்கள் நலனை முன்னிறுத்தி செயற்படுங்கள் – வேலணையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Thursday, January 3rd, 2019பிரதேச சபையை நாம் கைப்பற்றியதானது புகழுக்காகவோ தற்பெருமைக்காகவோ அல்ல. இப் பிரதேச மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற ஒரே நோக்குடனேயே இந்த சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் இயலுமானவரை மக்கள் நலனை முன்னிறுத்தி செயற்படுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டுமென்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் கட்சியின் வேலணை பிரதேச சபை அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
எமது கட்சி மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் அரசியல் செயற்பாடுகளை முன்னிறுத்தியே பணிகளை மேற்கொண்டுவருகிறது.
கடந்த காலத்தில் வேலணை பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்தி பணிகளை நாம் முன்னெடுத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்திருக்கின்றோம். ஆனாலும் இன்றும் பல தேவைப்பாடுகள் இப் பகுதியில் காணப்படுகின்றது.
பொறுப்பை ஏற்றுக்கொள்பவர்கள் அதற்குரிய மகத்துவத்துடன் மக்கள் சேவையை மேற்கொள்ளவேண்டும். கடந்த காலங்களில் கற்றுக் கொண்ட பாடங்களை படிப்பினையாகக் கொண்டு இனிவரும் காலத்திற்குரிய செயற்பாடுகளை நாம் ஒற்றுமையுடன் முன்னெடுக்கவேண்டும்.
ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியை நிர்ணயிக்கும் பொறுப்பில் பிரதேச சபைக்கே அதிக பங்குண்டு. அந்த வகையில் இந்த பிரதேச சபை எமது கட்சி ஆளுகைக்குள்ளிருப்பதால் மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக ஒவ்வொரு செயற்பாடுகளையும் மேற்கொண்டு மக்களின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்து கொடுக்க உழைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|