அரசியல் கைதிகள் விடுதலையில் எவரும் அரசியல் இலாபம் தேட வேண்டாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்பி வலியுறுத்து!

Wednesday, October 10th, 2018

அரசியல் கைதிகள் என்ற சொற் பிரயோகமானது இன்று நேற்றல்ல, 1940களில் அன்றைய அரசு சமசமாஜக் கட்சியின் தலைவர்கள் சிலரை கைது செய்து, சிறையில் அடைத்தது முதல் இந்த நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற சொற் பிரயோகமாகும். அதன் பின்னர் 1971, 1988 – 89 காலகட்டங்களிலும் தென்பகுதியில் ஏற்பட்டிருந்த சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சிகளின்போது இந்த சொற் பிரயோகம் மிகவும் அழுத்தமாகப் பிரயோகிக்கப்பட்டும் வந்திருந்தது.

அதன் தொடர்ச்சியாகவே நாங்கள் இந்த தமிழ் அரசியல் கைதிகளின் தடுப்பினையும் பார்க்க வேண்டியுள்ளது. இவர்கள் பாதாள உலகக் கோஸ்டியினர் அல்லர். தங்களது சுயத்திற்காக சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டோரும் அல்லர்.

தமிழ் மக்களின் விடுதலை நோக்கியப் போராட்டத்தின் ஒரு காலகட்டத்தில் விரும்பி இணைந்தோ அல்லது பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்டோ செயற்பட்டவர்கள் என்ற அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இழப்பீடுகளுக்கான எதிரீடுகள் வழங்குதல் தொடர்பிலான அலுவலகம் தொடர்பில் இடம்பெறுற்ற  விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த தமிழ் அரசியல் கைதிகள் தாங்களும் வாழ்வதற்காகவே போராடி வருகின்றனர். நீதி, நியாயம் கோருகின்றனர். இவர்களை வைத்து, வெளியில் இருந்து யாரும் அரசியல் செய்வதற்காக அல்ல. இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள். இலங்கையின் சட்டத்தின் பிரகாரம் குற்றம் ஒன்றினை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாரினால் கைதிகளிடமிருந்து பெறப்படுகின்ற வாக்குமூலம் பயன்படுத்த இயலாது எனினும், இந்தத் தமிழ் அரசியல் கைதிகள் அனைவருமே இன்னமும் பிணைகூட இன்றி தடுப்பில் இருப்பதற்கு ஒரே காரணம் அவர்களிடமிருந்து பொலிலிஸார் பெற்றுக் கொண்டுள்ள வாக்குமூலங்கள் என்றே கூறப்படுகின்றது. இந்த வாக்குமூலங்கள் எப்படி எல்லாம் பெற்றிருக்கக்கூடும் என்பது பற்றி, நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

2015ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் நான்காவது செயற்பாட்டுப் பிரிவின் மூன்றாவது விடயத்திற்கு ஏற்ப, இழப்புகளுக்கான நட்டஈடு வழங்கும் அலுவலகம் அமைப்பது தொடர்பில் இன்று நாங்கள் விவாதங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்கான நியாயத்தினைக் கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரதம் இன்று ஏனைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி – நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் நாங்கள் ஆரம்பந்தொட்டே வலியுறுத்தி வருகின்றோம். இத்தகைய நிலைமையில், இந்த நாட்டில் அரசியல் கைதிகள் என ஒருவரும் இல்லை என்ற கதையினைக் கூறி, நீங்கள் இந்த விடயத்தைத் தட்டிக் கழித்து வருகின்றீர்களே அன்றி, இதற்கொரு முடிவினை எடுப்பதற்கு பின்னடித்து வருகின்றீர்கள்.

ஆக, இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமும், சிங்கள மக்களுக்கு ஒரு சட்டமும் எனத் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டால், நீங்கள் அதிகளவில் செலவு செய்து விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் ‘தேசிய நல்லிணக்கம்’ என்பது வெறும் கண்துடைப்பு தானே? என்றே கேட்க விரும்புகின்றேன்.

Related posts:

கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் சிறுமி றெஜினாவின் இழப்பே இறுதி படுகொலையாக இருக்கும் - மாணவர் போராட்ட...
தூரநோக்குள்ள முன்னெடுப்புக்களை மேற்கொள்வதனூடாகவே பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் - வேலணை...
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அதிகாலை வேளையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!