ஏர் கனடா நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த பிரான்ஸ் தம்பதி!

ஏர் கனடா விமான நிறுவனம் மீது பிரான்ஸ் தம்பதியர் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்கு 21,000 டொலர்கள் இழப்பீடு வழங்க ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரெஞ்சு தம்பதியரான Michelம் Lynda Thibodeauவும் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தின் கீழ் ஏர் கனடா மீது 22 புகார்களைக் கூறியிருந்தார்கள்.
ஏர் கனடா விமானத்தில், அவசர வெளியேறும் வழியின் கதவில், வெறும் ஆங்கிலத்திலோ அல்லது பெரிய எழுத்துக்களில் ஆங்கிலத்திலும், சிறிய எழுத்துக்களில் பிரெஞ்சு மொழியிலும் மட்டுமேயோ, அவசர வெளியேறும் வழி என குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர்கள் புகாரளித்திருந்தனர்.
அதேபோல் சீட் பெல்ட்களில் ஆங்கிலத்தில் மட்டுமே ’lift’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததேயொழிய பிரெஞ்சு மொழியில் குறிப்பிடப்படவே இல்லை என்பதையும் அவர்கள் கவனித்திருந்தார்கள்.
மேலும் விமானத்தில் ஏறியதும் செய்யப்படும் அறிவிப்பில் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் அனைத்தும் பிரெஞ்சு மொழியில் இல்லை என்றும் அவர்கள் புகார் கூறியிருந்தார்கள்.
இதனால் பிரெஞ்சு மொழி பேசுவோரின் மொழி உரிமைகளை ஏர் கனடா மீறியதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். அவர்களது புகாரை ஏற்றுக்கொண்ட ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி Martine St-Louis, புகாரளித்த இருவருக்கும் மன்னிப்புக் கடிதம் எழுதுமாறு ஏர் கனடா நிறுவனத்துக்கு உத்தரவிட்டதோடு, 21,000 டொலர்கள் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வளவுக்குப்பிறகும், தானும் தனது மனைவியும் ஏர் கனடா விமானத்தில் பயணிப்பதை நிறுத்தும் திட்டம் எதுவும் தங்களுக்கு இல்லை என்கிறார் Michel Thibodeau.
Related posts:
|
|