மதுபான கடைகளை மூடவேண்டும்: 12 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

12 ஆம் வகுப்பு மாணவன் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனமுடைந்த நிலையில் மதுபான கடைகளை மூடவேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன்கோவிலை அடுத்த குருக்கள்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாடசாமி தினமும் குடித்துவிட்டு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அவரது மகன் தினேஷ் நல்லசிவனையும் படிக்கவிடாமல் தொல்லை செய்து வந்துள்ளார்.
நேற்றும் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த மாடசாமி, தினேஷுடன் தகராறு செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த தினேஷ், நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழி சாலை புகையிரத மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து வந்த காவற்துறை, தீயணைப்புத்துறை உதவியுடன் உடலை பாலத்தில் இருந்து கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பிவைத்தனர்.
அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் தேர்வு எழுதுவதற்கான அடையாள அட்டை, அனுமதி சீட்டு மற்றும் ஒரு கடிதமும் மீட்கப்பட்டது.
அந்த கடிதத்தில், தான் இறந்த பிறகாவது தன் தந்தை குடிக்காமல் இருக்க வேண்டும் என்றும் எழுதி வைத்துள்ளார்.
மேலும் தனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தினால் தான் தனது ஆன்மா சாந்தியடையும் என்றும் தினேஷ் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனது இறப்பிற்கு பிறாகாவது பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மதுபானக்கடைகளை அடைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இல்லை என்றால், தான் ஆவியாக வந்து மதுபானக்கடைகளை உடைத்து நொருக்குவேன் என்றும் தினேஷ் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடித்தை கைப்பற்றியுள்ள காவற்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related posts:
|
|