ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விரைவில் விலகல்: நாடாளுமன்றம் ஒப்புதல்!

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக முடிவு செய்து கடந்த ஜூனில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 52 சதவீத மக்கள் வெளியேற ஆதரவு தெரிவித்தனர், இதனால் பிரதமராக இருந்த டேவிட் கமரூன் பதவி விலகினார்.
இதனை தொடர்ந்து பிரதமராக தெரசா மே பதவியேற்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார்.
இதற்கிடையே இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி ஜினா மில்லர் என்ற பெண் தொழிலதிபர் பிரித்தானியா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என்று உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து மசோதா கீழவையில் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக 498 பேரும் எதிராக 114 பேரும் வாக்களித்தனர். இதற்கு அடுத்த கட்டமாக பிரபுக்கள் அவையில் விவாதித்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என கூறப்படுகிறது. ஒப்புதல் பெறப்படும் நிலையில் வருகிற மார்ச் மாத இறுதியில் முழுமையாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|