ஆண்டுதோறும் காற்று மாசடைவால் 6 லட்சம் குழந்தைகள் மரணம்!

உலகில் ஏழு குழந்தைகளில் ஒரு குழந்தை வெளிப்புற காற்றில் உள்ள நச்சு அளவுகள் மிக அதிகமாக உள்ள இடங்களில் வாழ்வதாக ஐ.நா. மன்ற குழந்தைகள் நிறுவனம் (யூனிசெஃப்) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக , அந்த நச்சு அளவுகள், சர்வதேச வழிமுறைகளில் உள்ள பாதுகாப்பான அளவுகளைக் காட்டிலும் ஆறு மடங்கு அல்லது அதை விடவும்அதிகமான அளவில் இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
”குழந்தைகளுக்குத் தூய்மையான காற்று வேண்டும்”(Clear the Air for Children) என்ற அமைப்பு முதல் முறையாக, செயற்கைக்கோள் படங்கள் மூலம் எத்தனைக் குழந்தைகள் உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள உலக அளவிலான வழிமுறைகளை விட அதிக அளவில் வெளிப்புற காற்று மாசடைந்துள்ள இடங்களில் உள்ளார்கள் என்றும் அவர்கள் உலகம் முழுவதும் எந்தெந்த இடங்களில் உள்ளார்கள் என்பதையும் காட்டியுள்ளது.
மொராக்கோவில் நடைபெறவுள்ள, காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு நடக்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், யுனிசெப் உலக தலைவர்களிடம் அவர்களது நாடுகளில் காற்று மாசுபடுவதைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
”காற்று மாசுபடுவது தான் ஒவ்வொரு ஆண்டும், ஐந்து வயதுக்கும் குறைவான சுமார் 6 லட்சம் குழந்தைகள் இறப்பதற்கு முக்கிய காரணி. மற்றும் இது தான் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை அச்சுறுத்தும் ஒன்றாகும்,” என யுனிசெப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஆண்டனி லேக் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஆசிய நாடுகளில் தான் அதிக அளவில் மாசடைந்த இடங்களில் 62 கோடி குழந்தைகள் வாழ்வதாகவும், அடுத்ததாக ஆப்பிரிக்கா நாடுகளில் 52 கோடி குழந்தைகள் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|