அவுஸ்திரேலியா வரலாற்றில் அகதிகளுக்கு 350 கோடி ரூபா இழப்பீடு!

Friday, September 8th, 2017

அவுஸ்திரேலியா வரலாற்றில் முதல் முறையாக அகதிகள் அடைந்த துன்பங்களுக்கு 350 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஒப்புதலை பிறப்பித்துள்ளது.

படகுகள் வழியே தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற சுமார் இரண்டாயிரம் அகதிகள் அவுஸ்திரேலிய அரசு கட்டுப்பாட்டில் மனுஸ் தீவு மற்றும் நவுரு தீவில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த 1,905 அகதிகள், “தாங்கள் மனுஸ் தீவு முகாமில் 2012 நவம்பர் முதல், 2014 டிசம்பர் வரையிலான காலத்தில் கடுமையான பாதிப்புகளுக்கும் திட்டமிடப்பட்ட துன்பங்களுக்கும் உள்ளானதாக” குற்றச்சாட்டினை எழுப்பியிருந்தனர்.

இதையொட்டி அவுஸ்திரேலிய அரசின் மீதும் இம்முகாமினை நிர்வகித்த ஜி4எஸ் மற்றும் பிராட்ஸ்பெக்ட்ரம் என்ற இரு பாதுகாப்பு நிறுவனங்கள் மீதும் வழக்கினை பதிந்தனர்.இந்த வழக்கு ஜூன் 2017, அவுஸ்திரேலியாவின் விக்டோரியா உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்த நிலையில், அவுஸ்திரேலிய அரசும் அந்த இரு பாதுகாப்பு நிறுவனங்களும் 70 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை (சுமார் 350 கோடி இந்திய ரூபாய்) இழப்பீடாக கொடுக்க முன்வந்திருந்தது.

இந்த தொகைக்கு தற்போது நீதிமன்றம் ஒப்புதலினை வழங்கியுள்ளது. இத்தொகை நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் அகதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.2013 முதல் கடுமையான அகதிகள் கொள்கையினை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசாங்கம் படகு வழியே அவுஸ்திரேலியாவுக்கு வர முயற்சித்தவர்களை திருப்பி அனுப்பியது.மேலும், அப்படி முயற்சிப்போருக்கு அவுஸ்திரேலியாவில் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் அறிவித்தது.

இதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஐ.நாவிலும் எதிர்ப்பு எழுந்த போதும் அம்முடிவினை தொடர்ந்து நியாயப்படுத்தி, நடைமுறைப்படுத்தி வந்தது அவுஸ்திரேலிய அரசு.இந்த வழக்கு விசாரணையை எதிர்கொள்ள செலுத்த வேண்டியிருக்கும் அதிகபட்சமான கட்டணத்தைச் சேமிப்பதற்காக நன்கு யோசித்து எடுக்கப்பட்ட முடிவு’ என அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் முன்பு தெரிவித்திருந்தார்.

இத்தனை பெரும் தொகையினை தடுப்பில் இருந்த அகதிகளுக்கு அவுஸ்திரேலிய அரசு வழங்கப்பட இருந்தாலும், மனுஸ் மற்றும் நவுரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எந்த அகதிகளும் அவுஸ்திரேலியாவில் மீள்குடியமர்த்தப்பட மாட்டார்கள் என அழுத்தமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் மனுஸ்தீவு முகாம் வரும் ஒக்டோபர் மாதம் மூடப்பட வேண்டும் என பப்புவா நியூ கினியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அவுஸ்திரேலிய மனித உரிமை வரலாற்றில் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பீடு என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: