அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை: அவசர நிலை பிரகடனம்!

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து தொடர்ந்து பதற்றம் நிகழும் சார்லொட் நகரில் வடக்கு கரோலினா ஆளுநர் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார்.
கீத் லமோன்ட் ஸ்கொட் என்ற கறுப்பினத்தவர் கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது. நகரில் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடொன்றில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் படுகாயத்திற்கு உள்ளானர்.
ஸ்கொட், அமெரிக்காவில் ஒரு வாரத்திற்குள் கொல்லப்பட்ட மூன்றாவது கறுப்பினத்தவராவார். இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அமெரிக்காவில் அண்மைக்காலத்தில் ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தன. நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டதால் சார்லொட் நகரில் கலகம் அடக்கும் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந் துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த தேசிய காவல் படையினர் குவிக்கப்பட்டதாகவும், ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் வடக்கு கரோலினா ஆளுநர் பட் மக்ரோரி குறிப்பிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவன்று 43 வயது கீத் லமோன்ட் ஸ்கொட் என்பவரை பொலிஸார் சுட்டுக் கொன்றது ஆர்ப்பாட்டக்காரர்களின் கோபத்திற்கு காரணமாகும்.
கொல்லப்பட்ட கறுப்பின நபரான ஸ்கொட் ஒரு துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், அதனை கீழே போடுமாறு தாங்கள் விடுத்த கட்டளைகளை அவர் அலட்சியம் செய்துவிட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அவரிடம் எந்த ஆயுதமும் இல்லை என்று ஸ்கொட்டின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக 13 வயது கறுப்பின சிறுவன் மற்றும் 40 வயது நிராயுதபாணியான கறுப்பினத்தவர் ஒருவர் கடந்த வாரம் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
Related posts:
|
|