2 வது ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா தோல்வி!

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்தது.
தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் போட்டி ஜோகனஸ்பர்க்கில் நேற்று நடந்தது. நாணயச்சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் தென்ஆப்பிரிக்காவை துடுப்பாட பணித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தானய தென்ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் குவித்தது. 6–வது சதத்தை எட்டிய கப்டன் டு பிளிஸ்சிஸ் 111 ரன்களும் (93 பந்து, 13 பவுண்டரி), டுமினி 82 ரன்களும் (58 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்), ரோசவ் 75 ரன்களும் விளாசினர். முந்தைய ஆட்டத்தின் நாயகன் குயின்டான் டி கொக் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 2–வது ஓவரிலேயே ஆரோன் பிஞ்சின் (1 ரன்) விக்கெட்டை இழந்தது. கேப்டன் ஸ்டீவன் சுமித் (14 ரன்), ஜார்ஜ் பெய்லி (9 ரன்) சொற்ப ரன்களில் நடையை கட்டினர். ஆரம்பத்தில் விழுந்த பேரடியில் இருந்து ஆஸ்திரேலிய அணியால் கடைசி வரை நிமிர இயலவில்லை. அந்த அணி 37.4 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஆனைத்து இலக்குகளையும் இழந்தது.. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 51 ரன்களும், டேவிட் வார்னர் 50 ரன்களும் எடுத்தனர்.
இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்ஆப்பிரிக்காவின் 2–வது மெகா வெற்றி இதுவாகும். பார்னல் 3 விக்கெட்டுகளும், ரபடா, பெலுக்வாயோ தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடரில் தென்ஆப்பிரிக்கா 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 3–வது ஒரு நாள் போட்டி நாளை மறுதினம் டர்பனில் நடக்கிறது.
Related posts:
|
|