காலிறுதிக்கு முன்னேறியது பிரேஸில் அணி !

Friday, August 12th, 2016

ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் பிரேஸில் அணி காலிறுதிக்கு முன்னேறியது. ஆர்ஜென்ரீனா வெற்றி வாய்ப்பை இழந்து வெளியேறியது

ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் 16 அணிகள், 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. “ஏ” பிரிவில் நடந்த கடைசி லீக்கில் போட்டியை நடத்தும் பிரேஸில் அணி 4 – 0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது

கேப்ரியல் பார்போசா (2 கோல்), கேப்ரியல் ஜீசஸ், லுவான் ஆகியோர் பிரேஸில் அணியில் கோலடித்தனர். தென் ஆபிரிக்கா மற்றும்  ஈராக்குக்கு எதிராக கோல் எதுவும் அடிக்காமல் டிரா கண்டதால் பிரேஸில் அணியினர் மீது உள்ளூர் ரசிகர்கள் வெறுப்பைக் காட்டினர். தற்போதைய வெற்றி இரசிகர்களின் கோபத்தை தணித்திருக்கும்

இரண்டு முறை (2004,2008) சாம்பியனான ஆர்ஜென்ரீனா அணி தனது கடைசி லீக்கில் (டி பிரிவு) ஹொண்டுராசுடன் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களமிறங்கியது. எதிரணி இரண்டு பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட போதிலும் ஆர்ஜென்ரீனா அணியால் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து டிரா மட்டுமே (1 1) செய்ய முடிந்தது

“டி” பிரிவில் போர்த்துக்கல் (7 புள்ளி) முதலிடத்தையும்  ஹொண்டுராஸ், ஆர்ஜென்ரீனா தலா 4 புள்ளிகளுடன் அடுத்த இடத்திலும் இருந்தன. கோல் வித்தியாசம் அடிப்படையில் ஹொண்டுராஸ் காலிறுதி வாய்ப்பைப் பெற்றது. ஆர்ஜென்ரீனா வீட்டுக்கு அனுப்பப்பட்டது. சி பிரிவில் 3 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்ட நடப்பு சம்பியன்  மெக்சிக்கோவும் லீக் சுற்றுடன் காலியானது

இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் போர்த்துக்கல்  ஜேர்மனி, நைஜீரியா  டென்மார்க், தென்கொரியா   ஹொண்டுராஸ், பிரேஸில்  கொலம்பியா அணிகள் மோதுகின்றன

Related posts: