இங்கிலாந்தில் வென்றமை மகிழ்ச்சியளிக்கின்றது – இளையோர் அணித் தலைவர் சரித் அசலங்க!

இலங்கிலாந்து மண்ணில் அதன் காலநிலையில் விளையாடி வெற்றிபெறுவதென்பது இலகுவான காரியமல்ல. இங்கிலாந்து மண்ணில் வெற்றிபெற்றமை தொடர்பில் நானும் எனது அணி வீரர்களும் மிகவும் மகிழ்ச்சியிலுள்ளோமென 19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்
இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி, 19 வயதிற்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணியுடன் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது.
19 வயதிற்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து 3-0 என வெள்ளையடிப்புச் செய்த 19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி நேற்று கிண்ணத்துடன் நாடு திரும்பியது.
இந்நிலையில் 19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணிக்கு இலங்கை கிரிக்கெட் சபையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. குறித்த வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே 19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெற்றி குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கிலாந்து மண்ணில் அதன் காலநிலையில் விளையாடி வெற்றிபெறுவதென்பது இலகுவான காரியமல்ல. இங்கிலாந்து மண்ணில் வெற்றிபெற்றமை தொடர்பில் நானும் எனது அணி வீரர்களும் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளோம்.
இலங்கையில் விளையாடுவதைப்போன்று அங்கு விளையாடமுடியாது. மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் விளையாடி வெற்றிபெற்றுள்ளோம். இவ்வாறான சந்தர்ப்பத்தை எமக்கு ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக இலங்கை கிரிக்கெட் சபைக்கு நன்றியை தெரிவிக்கின்றேன். எமக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை அங்கு பல உதவிகளை செய்து கொடுத்தது அதற்கும் நன்றி தெரிவிக்கின்றோம்..
இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால, இலங்கை கிரிக்கெட் சபையின் துணைத் தலைவர் ஜயந்த தர்மதாஸ, இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா, தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய மற்றும் வீரர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை, 1986 ஆம் ஆண்டு அசங்க குருசிங்க தலைமையிலான 19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி, இங்கிலாந்து மண்ணில் 1-0 என தொடரைக் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் 30 வருடங்களுக்குப் பின்னர் சரித் தலைமையிலான 19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி இங்கிலாந்து மண்ணில் 3-0 என தொடரை தற்போது கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலிய அணியை 3-0 என்று டெஸ்ட் தொடரை வெள்ளையடிப்புச் செய்து வரலாற்று வெற்றிபெற்று சாதனை படைத்த நிலையில் இலங்கையின் 19 வயதிற்குட்பட்டோர் அணி இங்கிலாந்து மண்ணில் 3-0 என ஒருநாள்தொடரை வெள்ளையடிப்புச் செய்து வரலாற்று வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|