விக்னேஸ்வரனால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை – ஆனந்தசங்கரி!

எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதால் எந்த பயனும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடக்கு மாகாண சபையில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியிலிருந்து சி.வி.விக்னேஸ்வரன் ஒதுங்கியிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தெரிவிக்கையில் –
“வடக்கு மாகாண சபை ஆட்சியில் இருந்தபோது அதில் அங்கம் வகித்த அமைச்சர்கள் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த நிர்வாகத்திலேயே இந்தக் குற்றச் சாட்டுகள் எழுந்தன. அப்படியானால் முதலில் அவர் தனது பதவியிலிருந்து விலகி நீதியான விசாரணைக்கு இடமளித்திருக்க வேண்டும்.
இவ்வாறு பதவியில் இருந்து ஒதுங்கி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருப்பார். வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் செய்த தவறினால் இப்போது நீதிமன்றத்தின் ஊடாக அவரது நிர்வாகப் பிழைகள் வெளியில் வந்துள்ளன.
இவற்றை செய்யாமல் தவறிவிட்டு தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகின்றோம் என எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|