வாகன இறக்குமதியை நிறுத்தியதன் மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதியை சேமிக்க முடிந்துள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Thursday, June 17th, 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆடம்பர வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தப்பட்டதன் மூலம் 200 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதியை சேமிக்க முடிந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த வாகன இறக்குமதிக்கான பெறுகை முழுமையாக இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறினார்.

மேலும் அம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய வாகன இறக்குமதி மேற்கொள்ளப்படும் எனலும் தெரிவித்தள்ள நிதி இராஜாங்க அமைச்சர் இதற்காக ஒரு பில்லியன் ரூபா செலவாகும் என்றும் மக்களுக்கான பணிகளை மேற்கொள்வதில் அரசாங்கம் பின்நிற்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

அதேநேரம் பயணத்தடை அமுலில் இருந்த காலப்பகுதியில் நாட்டிற்கு 45 ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உள்ளுர் உற்பத்திகளினால் கிடைக்கும் வருமானம் ஆயிரத்து 500 கோடி ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் பயணத் தடை காலப்பகுதியில் சிறிய அளவிலான வர்த்தகர்களின் வருமானம் வீழ்ச்சி கண்டிருப்பதனால் கடன் செலுத்தும் வீதமும் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது பொருளாதாரத்தில் பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறிய ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அரச சேவையாளர்களில் அதிகளவானோருக்கு வேலை வழங்காது சம்பளம் வழங்கும் நிலை ஏற்பட்டிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

பொதுவான வாகன இறக்குமதியை நிறுத்தியதன் மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதியை சேமிக்க முடிந்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சேமிக்கப்பட்ட பணம் கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதகாவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 15 மாதங்களாக இந்த நிதி சேமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் வாகன இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

முல்லை மாவட்டத்தில் வடமாகாண ஆளுனருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு விசாரணைகள்  நடைபெற்றுள்ளது!
கொரோனாவால் வீடுகளில் இறக்கும் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு - தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவிப்பு!
தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கவும் - இத்தாலியில் வாழும் இல...