வலி. வடக்கு மக்களுக்கான விசேட அறிவித்தல் – மாவட்டச் செயலர்!

Wednesday, May 15th, 2019

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் குடியமர்ந்துள்ள மக்கள் மட்டுமே அந்தப் பகுதிக்குரிய பதிவுகளைப் பேண முடியும். அவ்வாறின்றி, வலி.வடக்கு மக்கள் வேறிடங்களில் வசிப்பார்களாயின், வலி.வடக்குப் பதிவை மேற்கொள்ள முடியாது. அவர்கள் வசிக்கும் இடத்தின் பதிவையே பேணவேண்டும். இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வலி.வடக்குக் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், தமது சொந்தப்பதிவை நீக்கிவிட்டு தற்போது வசிக்கும் கிராமங்களில் நிரந்தர வதிவிட அட்டையைப் பெற்றுக் கொள்ளுமாறு கிராம அலுவலகர்கள் நிர்ப்பந்திக்கின்றனர் என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நாங்கள் தற்போது உறவினர் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் தங்கியிருக்கிறோம். நாம் வருடந்தோறும் மாறும் வீடுகளுக்கு பதிவுகளை மேற்கொள்ள முடியாத நிலையிலும் எமது சொந்தப்பகுதியில் மீள் குடியேறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலும் எமது பதிவுகளினை இத்தனை ஆண்டுகளாக வலி.வடக்கிலேயே பேணி வருகின்றோம்.

தற்போது நாம் எந்தத் தேவைக்காக வலி.வடக்கில் உள்ள கிராம அலுவலகர்களிடம் சென்றாலும் துருவித் துருவி விசாரணை நடத்துகின்றனர். பிற பகுதிகளில் தற்காலிக அடிப்படையில் வசித்து நிரந்தரக் கிராமத்தில் பதிவு உள்ளது என்று கூறும் போது உடனடியாகவே எமது பதிவு அட்டைகளில் பேனாவால் கீறி பெயர்களை நீக்குகின்றனர்” என்று தெரிவிக்கின்றனர்.

“தற்போது நாட்டில் காணப்படும் அவசர கால சட்ட விதிகளின் கீழ் மேற்கொள்ளும் சோதனை  நடவடிக்கைகளின் போது வதியும் அலுவலகர்களே உறுதிப்படுத்த வேண்டும். தவறினால் கைது செய்யப்படக் கூடும் என்பதே முக்கிய பிரச்சினை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் எமது சொந்தக் கிராமத்தின் பதிவை நாம் இழந்து நிற்கின்றோம்”  என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மாவட்டச் செயலரிடம் கேட்ட போதே தற்போது வசிப்பிட பதிவுதான் வேண்டும் என்று கூறினார்.

“வலி.வடக்குப் பதிவுகளை மேற்கொண்டு பிற இடங்களில் வசிக்கும் அத்தனை பேரின் பதிவுகளும் நீக்கப்படும். வலி.வடக்கை நிரந்தரமாகக் கொண்டுள்ள எவரும் சொந்த இடம் திரும்பவோ அல்லது வீட்டுத்  திட்டங்களை பெறுவதற்கு இவை தடையாக அமையாது” என்றும் தெரிவித்தார்.

Related posts: