வடமாகாணத்தில் 12 முதல் 19 வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம் – மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு!

வடமாகாணத்தில் 12 வயது தொடக்கம் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் –
கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் விசேட தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கான பைஸர் கோவிட்-19 தடுப்பூசியானது முதற்கட்டமாக மேற்கு மாகாணம், குருநாகல் மற்றும் அநுராதபுர மாவட்டங்களில் செப்ரெம்பர் 24 ஆம் திகதிமுதல் வழங்கப்பட்டு வருகின்றது.
சுகாதார அமைச்சானது அடுத்த கட்டமாக வரும் ஒக்ரோபர் மாதம் 1 ஆம் திகதிமுதல் நாடு முழுவதும் உள்ள விசேட தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கு இத் தடுப்பூசியினை வழங்க முடிவு செய்துள்ளது.
இத்தடுப்பூசியானது சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக குழந்தை நல மருத்துவ நிபுணர் அல்லது பொது வைத்திய நிபுணர் ஒருவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வழங்கப்படும்.
எனவே வடமாகாணத்தில் குழந்தைநல மருத்துவ நிபுணர் அல்லது பொது வைத்திய நிபுணர் உள்ள வைத்தியசாலைகளில், யாழ்.மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் இத்தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|