வடக்கின் அபிவிருத்தியை எமது அரசாங்கம் மிக ஆர்வமாக முன்னெடுக்கின்றது – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் எமது அரசாங்கம் மிகவும் ஆர்வமாக செயற்பட்டு வருகின்றது என அஞ்சல் சேவைகள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டையில் இன்றைதினம் புதிய தபாலக கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் –
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கவலைப்பட்டாலும் 2010 ற்குப் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
2009 ற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களிற்கு காரணமான அரசியல் காரணங்கள் பற்றி நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை.
ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு திட்டங்களை நாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளோம்.
சுபிட்சத்தை நோக்கு என்ற தற்போதைய எமது அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் வடபகுதியிலும் பல்வேறு பட்ட அபிவிருத்தி திட்டங்கள் கிராம மட்டங்களிலும் பிரதேச மட்டங்களிலும் இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில் கொரோனா காலத்திலும் கூட தபால் சேவை மிகவும் சிறப்பாக செயற்பட்டது.
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை விவசாயம் ,கல்வி உயர் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளே மிகமுக்கியமான துறையாக காணப்படுகின்றது அத்துடன் அந்த துறைகளை அபிவிருத்தி மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.
அதேநேரம் 224 வருடங்கள் பழமை வாய்ந்த தபால் துறையை நவீனமயப்படுத்தி தபால் துறையுள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செயற்படுத்தல் தொடர்பில் ஆராய்கிறோம்.
அதற்காக பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம், வடபகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு வடக்கில் உள்ள எமது அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் வடபகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு நாம் எப்போதும் ஒத்துழைப்போம்” எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|