யாழில் சட்டவிரோத செயலைத் தடுக்க மேலதிக பொலிஸார்!
Thursday, July 5th, 2018
யாழில் அதிகரித்துள்ள வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை அடுத்து வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து மேலதிக பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய நாட்களாக யாழில் வாள்வெட்டுகள், பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், கொள்ளைகள் போன்ற சமூக குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சமும் இலங்கை அரச தரப்பின் மீது கடும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் பிரமுகர்கள் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கு இலங்கை அரசாங்கம் தவறி விட்டதாக சுட்டிக்காட்டியுள்ளதால் யாழ்.மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து பொலிஸாரினதும் விடுமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இரண்டு வாரங்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாழ்.குடாநாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து 100 பொலிஸார் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதனிடையே நிலைமைகளை நேரில் ஆராய்வதற்கு, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
Related posts: